தென்சென்னையில் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொகுதியான வேளச்சேரி தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் - அசன் மவுலானா
இத்தொகுதியில் ஏற்கெனவே எம்எல்ஏவாக உள்ள அசன் மவுலானா மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இப்போதுள்ள 50 ஆண்டுகால பழைய கழிவுநீர் வடிகாலுக்கு பதிலாக, புதிய கழிவுநீர் வடிகால் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
அதிமுக - எம்.கே.அசோக்
அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் எம்.கே.அசோக், திமுக ஆட்சியில் மழை நீர் வடிகால் முழுமையாக செயல்படுத்தப்படாததால், மழைக்காலத்தில் வேளச்சேரி வெள்ளச்சேரியாகவே இன்றும் உள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும், வெள்ளச்சேரி வேளச்சேரியாக மாற்றப்படும். பட்டா வழங்கப்படும், தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கூறி வருகிறார்.
நாம் தமிழர் கட்சி - கீர்த்தனா
நாதக வேட்பாளர் கீர்த்தனா வீடுவீடாகச் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ‘திமுகவின் சர்வாதிகார ஆட்சி வேண்டுமா அல்லது நாம் தமிழர் கட்சியின் மக்கள் ஆட்சி வேண்டுமா என்று சிந்தியுங்கள்.
உங்களை நம்பித்தான் களத்தில் நிற்கிறோம். மக்கள் விரும்பும் நல்லாட்சியை உறுதியாக கொடுப்போம்’ என்று கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் - ஆர்.குமார்
தவெக வேட்பாளரான ஆர்.குமார், விஜய் முதல்வரானதும் பட்டா வழங்கப்படும். தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணன் சீர், தாய்மாமன் சீர் உட்பட அனைத்து வாக்குறுதிகளையும் விஜய் நிறைவேற்றுவார் என்று உறுதி அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அதிகமுள்ள வேளச்சேரி தொகுதியில் இந்த முறை வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.