திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்ட ஒரு ராஜ்யசபா இடத்தை கைப்பற்ற காங்கிரஸின் பெரும் தலைவர்களும், முக்கிய புள்ளிகளும் முட்டி மோதிய நிலையில், புதுமுகமான கிறிஸ்டோபர் திலக்கை டிக் அடித்திருக்கிறார் ராகுல் காந்தி.
கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவையில் திமுகவுக்கு 23, காங்கிரஸுக்கு 5 எம்எல்ஏக்கள் இருந்தனர். அப்போது திமுக சார்பில் கனிமொழியும், திருச்சி சிவாவும் ராஜ்யசபா எம்பி ஆவதற்கு காங்கிரஸார் ஆதரவு அளித்தனர்.
2016ல் காங்கிரஸூக்கு 8 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், 2019 ராஜ்யசபா தேர்தலிலும் திமுக சார்பில் நிறுத்தப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் வாக்களித்தனர். அதன்பிறகு வந்த ராஜ்யசபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு சீட் கொடுத்ததால், காங்கிரஸூக்கு திமுக சீட் தரவில்லை.
ஒவ்வொரு முறையும் ராஜ்யசபா எம்.பி. பதவியை காங்கிரஸ் கேட்கும் போதெல்லாம் திமுக மறுத்து வந்தது. அதனால் இந்த முறை காங்கிரஸ் மேலிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு செல்லும்போதே ராஜ்யசபாவையும் சேர்த்து பேச்சை தொடங்கியது. அதிகார பங்கீடு அஸ்திரத்தை முன்வைத்து திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து, ராஜ்யசபா சீட்டை விடாப்பிடியாக வாங்கியது. இந்த ஒரு சீட்டைக் கைப்பற்ற தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களான கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, திருநாவுகரசர், சுதர்ன நாச்சியப்பன், ஜெயகுமார் உள்ளிட்டோர் நேரடியாகவே களமிறங்கினர்.
இந்த ஒரு சீட்டு உறுதியானதும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மூலம் வேகவேகமாக காய்களை நகர்த்தினர். ஆனால் காங்கிரஸின் இளந்தலைவர் ராகுல் காந்தி, சீனியர்களுக்கு பதிலாக அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அந்த நேரத்தில் ராகுல் காந்தியின் முக்கிய ஆலோசகரான ஐஏஎஸ் அதிகாரி கே. ராஜூ, கிறிஸ்டோபர் திலக்கின் பெயரை ரேசில் சேர்த்துவிட்டார்.
மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் மேலிட பொறுப்பாளராக இருக்கும் இவர், ராகுல் காந்தியின் நம்பிக்கையை பெற்றிருந்தார். இதற்கு முன்னர் ஆந்திர தேர்தலின்போது மேலிடப் பொறுப்பாளராக இருந்த போது ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக அவரது தங்கை ஷர்மிளா ரெட்டியை முன்னிறுத்தி, காங்கிரஸூக்கு கை கொடுத்தார். அதனால் ஆந்திராவை சேர்ந்த கே.ராஜூ வின் நம்பிக்கையை பெற்று, ராகுல் காந்திக்கும் நெருக்கமானவராக மாறினார்.
கிறிஸ்டோபர் திலக் தமிழகத்தை தாண்டி கேரளா,கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில தேர்தல்களிலும் தீவிர களப் பணி மேற்கொண்டதால் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கே.சி.வேணுகோபால் வரை எல்லா தலைவர்களுக்கும் பரிச்சயமானவர்.
கிறிஸ்துவ பட்டியலின வகுப்பை சேர்ந்த திலக் திருச்சியை சேர்ந்தவர். இவரை தேர்வு செய்தால் தமிழகத்தில் வசிக்கும் கிறிஸ்துவர்களின் கவனமும், பட்டியலினத்தவரின் பார்வையும் காங்கிரஸின் பக்கம் திரும்பும் என ராகுல் கணக்குப் போட்டுள்ளார். இதனால் ராஜ்யசபா சீட்டுக்கு சீனியர்களை கடந்து புதுமுகமான கிறிஸ்டோபர் திலக்கின் பெயரை டிக் அடித்திருக்கிறார் ராகுல் காந்தி.
யார் இந்த திலக்? - அண்மை காலமாக டெல்லியை மையமாக வைத்து வட இந்திய மாநிலங்களில் சுற்றி வரும் கிறிஸ்டோபர் திலக் தமிழக காங்கிரஸிலும் கள அளவில் பணியாற்றியவர். இளங்கலை பொறியியலும் முதுகலை மேலாண்மை படிப்பும் படித்த இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸில் இணைந்த இவர் அக்கட்சியின் இளைஞர் பிரிவு, எஸ்சி, எஸ்டி பிரிவு ஆகியவற்றில் பணியாற்றினார். பின்னர் காங்கிரஸின் செயலாளராக உயர்ந்து பல மாநிலங்களில் மேலிடப் பொறுப்பாளராக இருந்தார்.