விஜய் உடன் ஜெகதீஷ் பழனிசாமி

 
தமிழகம்

யார் இந்த ஜெகதீஷ்? - விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ‘ரூட்’ வியூகம்!

டெக்ஸ்டர்

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். இந்த அபாரமான வளர்ச்சிக்கு பின்னால் திரைமறைவில் இருந்து மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவர்தான் அவரது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமி.

சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக விஜய்யின் பிராண்ட் மதிப்பை உயர்த்தியதில் தொடங்கி, தமிழக வெற்றிக் கழகத்தின் டிஜிட்டல் ராஜ்ஜியம் வரை ஜெகதீஷ் மற்றும் அவரது ‘தி ரூட்’ நிறுவனம் ஆற்றிய பங்கு தற்போது மற்ற அரசியல் கட்சிகளின் பார்வையை ஒட்டுமொத்தமாக திருப்பியிருக்கிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் எம்ஜிஆருக்கு நிகரான ஒரு பிம்பமாக விஜய்யை இன்று கொண்டு வந்து நிறுத்தி இருப்பதற்கு பின்னால் பல காரணிகள் உள்ளன. அதில் ஜெகதீஷும், அவருடைய சோஷியல் மீடியா குழுவும் மிக முக்கியமான பங்காற்றியதை விவரம் அறிந்த யாரும் மறுக்க முடியாது.

விஜய்யின் அரசியல் வருகைக்கான அஸ்திவாரம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதல்ல. அது பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இதற்குப் பின்னால் ஜெகதீஷின் ரூட் நிறுவனம் வெறும் சினிமா மேலாண்மை நிறுவனமாக மட்டுமின்றி, ஒரு மிகப் பெரிய தரவு பகுப்பாய்வு மையமாகவும் செயல்பட்டது.

சமூக வலைதளங்களில் விஜய்யின் ரசிகர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்கள் எந்த மாதிரியான செய்திகளைப் பகிர்கிறார்கள், எதற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பதை ரூட் நிறுவனம் மிகத் துல்லியமாக கண்காணித்தது. இதற்காக ஆயிரக்கணக்கான டிஜிட்டல் வல்லுநர்கள் பணியமர்த்தப்பட்டனர். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் ஜென்ஸீ தலைமுறை இளைஞர்களைக் கவர ஒரு தனித்துவமான அல்காரித வியூகம் வகுக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் விஜய்க்கான அல்காரிதம் எவ்வாறு இயங்குகிறது என்பதே ஓர் ஆச்சரியமான விஷயம்.

ஒரு சராசரி இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் ஒரு சிறிய வீடியோவையோ அல்லது ஒரு ஹேஷ்டேகையோ பார்த்தால், அடுத்த சில நிமிடங்களில் அவரது பக்கம் முழுவதும் விஜய் தொடர்பான செய்திகளாகவே மாறும் வகையில் அல்காரித நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதைச் சாத்தியமாக்க 0 முதல் லட்சக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான 'ஷேடோ ஐடிக்கள்' உருவாக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றும் விஜய்யின் புகழைப் பாடும் வீடியோக்களையும், அவரது அரசியல் கருத்துகளையும் தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டுக் கொண்டே இருந்தன. இதன் மூலம், ஒரு செயற்கையான 'டிஜிட்டல் அலை' உருவாக்கப்பட்டது. இதுவும் இன்று சாதாரண பயனாளர்களின் அல்காரிதத்தை ஆக்கிரமித்து, விஜய்யை ஒரு தவிர்க்க முடியாத தலைவராக உருவாக்கியுள்ளது.

இதன் மையப்புள்ளி 'ரூட் நிறுவனம் நிர்வகிக்கும் ஆயிரக்கணக்கான வாட்ஸ்அப் குழுக்களில் தான் இருக்கிறது. மற்ற அரசியல் கட்சிகள் தேர்தலின்போது மட்டுமே வாட்ஸ்அப் குழுக்களை தொடங்குகின்றன அல்லது ஏற்கெனவே இருக்கும் குழுக்களை வீரியமாக பயன்படுத்துகின்றன. ஆனால் ஜெகதீஷின் குழு, கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தமிழகத்தின் ஒவ்வொரு ரசிகர் மன்றத்தையும் ஒருங்கிணைத்து வாட்ஸ்அப் குழுக்களை வலுப்படுத்தியது.

இந்தச் சங்கிலித் தொடர் அமைப்பில், ஒரு செய்தி கிளம்பினால், அது அடுத்த ஐந்து நிமிடங்களில் தமிழகத்தின் லட்சக்கணக்கான இளைஞர்களின் கைபேசிக்குச் சென்றடையும் வகையில் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் விஜய் படங்கள் பற்றியும், சமூக வலைதளங்களுக்கான சினிமா கன்டெண்ட் பற்றியும் மட்டுமே பேசப்படும் இடங்களில் வலம் வந்த இந்த வாட்ஸ்அப் குழுக்களில், போகப் போக விஜய்யை ஒரு குடும்ப உறுப்பினர் போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் பகிரப்பட்டன. பின்னாட்களில் விஜய்யின் அரசியல் வருகையை கொண்டாடும் இடங்களாக அவை மாறின.

இது ஒருபுறமென்றால் இன்ஸ்டாகிராம் என்பது இன்றைய இளைஞர்களின் தனி உலகம். அந்த உலகத்தின் மொழியை ஜெகதீஷ் மிகச் சரியாகப் புரிந்து கொண்டார். விஜய் புகழ் பாட, அவரது படங்களில் வரும் மாஸ் வசனங்கள் கொண்ட ரீல்ஸ்களை பகிர்வதற்காக உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான இன்ஸ்டா ஐடிக்கள், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பிறகு விஜய்யின் ஒவ்வொரு மேடைப் பேச்சையும் துண்டு துண்டாக வெட்டி, அதற்கேற்ற பின்னணி இசை மற்றும் சினிமா எடிட்டிங் நுட்பங்களுடன் வெளியிட்டன.

இது அரசியல் ஒவ்வாத இளைஞர்களிடம் கூட ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய்யின் அரசியல் ஒரு ஸ்டைலான விஷயமாகக் காட்டப்பட்டது. இந்த வைரல் அரசியல் முறையும்கூட தவெகவை குறுகிய காலத்தில் ஒரு மாபெரும் சக்தியாக மாற்றியது.

இதன் பின்னணியில் இருந்த ஜெகதீஷின் திட்டமிடல் என்பது, காலம்காலமாக அரசியலில் ஊறிப்போன மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமைந்தது. மற்ற பெரிய அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களை வெறும் அறிக்கை வெளியிடும் இடங்களாக மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால் விஜய்க்காக களமாடும் சமூக வலைதள ஐடிக்கள் இதுபோன்ற விஷயங்களை எப்போதும் சீண்டுவதில்லை.

உதாரணமாக, விஜய்க்கு எதிராக ஒரு விமர்சனம் எழுந்தால், அதைத் தர்க்கரீதியாக அணுகாமல், ஒரு மிகப் பெரிய டிஜிட்டல் தாக்குதல் மூலம் அந்த விமர்சனத்தை அமுக்கிவிடும் முறை பல ஆண்டுகளாக கையாளப்பட்டு வருகிறது. விஜய்க்கு போட்டியாக கருதப்படும் நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு ஒருநாள் முன்பே அந்த படத்தின் பெயருடன் ‘டிசாஸ்டர்’ என்று சேர்க்கப்பட்ட ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆவது வழக்கம்.

ஆயிரக்கணக்கான ஐடிக்கள் ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வதன் மூலம், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் உத்தியை கையாள்கின்றன. இந்த நுட்பமான மேலாண்மை முறைதான் விஜய்யின் பிம்பத்தைச் சேதமில்லாமல் காப்பாற்றி வருகிறது. இத்தனை ஆண்டு காலம் சினிமா பக்கம் கவனம் செலுத்திய இந்த ஐடிக்கள் அனைத்தும் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அக்கட்சி கொடியுடன் அரசியல் பக்கம் வந்தது தற்செயலானதல்ல.

இதனை சாத்தியப்படுத்திய ஜெகதீஷ் பழனிசாமியின் வெற்றிக்குக் காரணம், அவர் விஜய்யின் மேலாளராக மட்டும் இல்லாமல், ஒரு திறமையான பிராண்ட் மேனேஜராக செயல்படுவதுதான். ஓர் அரசியல் கட்சியின் வெற்றி என்பது களப்பணியில் மட்டுமல்ல, மக்களின் மனதில் அந்தத் தலைவர் எவ்வாறு பதிய வைக்கப்படுகிறார் என்பதில்தான் இருக்கிறது. இதைச் சமூக வலைதள அல்காரிதங்கள் மூலம் சாத்தியமாக்க முடியும் என்பதைத் தமிழகத்தில் ஜெகதீஷ் நிரூபித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களின் ஒவ்வொரு நுணுக்கத்தையும், இளைஞர்களின் மனவோட்டத்தையும் மிகச் சரியாகக் கணித்து, அதற்கேற்ப ஒரு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கியதுதான் விஜய்யின் வெற்றிக்கு அடிப்படை. இன்று தமிழக அரசியலில் மற்ற கட்சிகள் தங்களின் ஐடி விங்குகளை மாற்றியமைக்க முயல்வதே ஜெகதீஷ் ஏற்படுத்திய இந்தத் தாக்கத்துக்கு ஒரு சான்று. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் கட்டமைப்பை தாண்டிச் செல்லவேண்டும் என்றால், அதற்கு மிகப்பெரிய ஆள்பலமும், அசுர உழைப்பும் தேவை.

துரதிருஷ்டவசமாக களப் பணியில் கவனம் செலுத்திய பெரிய கட்சிகள், ஆன்லைனில் கவனம் செலுத்த தவறிவிட்டன. இதன் காரணமாகத்தான் இவ்வளவு ஆண்டுகளும் திரைக்குப் பின்னால் இருந்து செயல்பட்ட ஜெகதீஷின் பெயர் சமீபகாலமாக பொதுவெளியில் அடிபடத் தொடங்கி இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் அவரை ஏதேனும் ஒரு விவகாரத்தில் சிக்க வைக்க முடியுமா என எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

எப்படி இருப்பினும் தமிழகத்தின் வருங்கால அரசியலில் டிஜிட்டல் மேலாண்மை என்பது எவ்வளவு முக்கியமானது என்பதற்கு ஜெகதீஷ் பழனிசாமி தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தியிருக்கிறார்.

SCROLL FOR NEXT