புதுச்சேரி: மீன்பிடி தடைக் காலம் முடிந்து கடலுக்கு மீனவர்கள் புறப்பட்டதையடுத்து அவர்களை வழியனுப்பி வைத்தபோது, புதுச்சேரி சட்டப்பேரவை எப்போதும் கூடும் என்ற கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார்.
மத்திய அரசின் உத்தரவுப்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. புதுச்சேரியில் கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலும், காரைக்காலில் மண்டபத்தூர் முதல் வாஞ்சூர் வரையிலும் உள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன.
தடை காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை சீரமைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். 60 நாட்கள் தடைக்காலம் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, தேங்காய்திட்டு துறைமுகத்தில் ஆழ்கடல் மீன்பிடிக்கச் செல்லும் 144 விசைப்படகுகளை தயார் செய்யும் பணி மும்மரமாக நடைபெற்றது.
இங்கு 120 படகுகளில் 80-க்கும் மேற்பட்ட படகுகள் இன்று கடலுக்குச் சென்றன. மற்ற படகுகள் அடுத்தடுத்த நாட்களில் கடலுக்குச் செல்லும் எனக் கூறப்படுகிறது.
மீனவர்கள் தங்கள் படகுகளில் போதிய அளவு ஐஸ்கட்டிகள், டீசலை ஏற்றி, நீண்ட நாட்களுக்கு பின் கடலுக்குச் செல்ல தயாராகினர். இதனைத் தொடர்ந்து தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் பணிகள் நடந்தது.
மீனவர்கள் புனித நீரை கடலில் ஊற்றியும், மலர் தூவியும் பூஜை செய்தும் வழிபட்டனர். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி விசை படகுகளுக்கு மலர் தூவி கொடியசைத்து மீனவர்களை தொழிலுக்கு வழியனுப்பி வைத்தார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறுகையில்," வருகிற 17-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். அமைச்சர்கள் பதவியேற்றவுடன் புதுச்சேரி சட்டப்பேரவை எப்போது கூடும் என தெரிவிக்கப்படும். சட்டப்பேரவையை கூட்ட ஆகஸ்ட் வரை காலமுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து நியமன எம்எல்ஏக்கள் பதவி குறித்து முடிவு எடுப்போம்” என்றார்.