சென்னை: தலைமை என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும் எனவும், மே 10-ம் தேதி வரை சென்னையிலேயே இருக்க வேண்டும் எனவும் எம்எல்ஏக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக தேர்தலை சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளும்கட்சியாக இருந்த திமுக 59 இடங்களிலும், எதிர்கட்சியான அதிமுக 47 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றிபெற்றன.
எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது. இதற்கிடையே ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் தவெக தலைவர் விஜய் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.
இதற்காக அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் மட்டுமே தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மற்ற கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுக்க முன்வராததால் தவெக தவிப்பில் ஆழ்ந்துள்ளது.
இந்நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, “கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. தலைமை என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும். மேலும், எம்எல்ஏக்கள் மே 10-ம் தேதி வரை சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இன்னொரு தேர்தலுக்கு தமிழகம் தயாராக இல்லாத நிலையில், நமது மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும்.
இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல் நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனே எடுக்கும் அதிகாரம் தலைவருக்கு வழங்கப்படுகிறது. கூட்டணியை முறித்துக்கொண்ட காங்கிரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்பின் திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 23 இடங்களில் அவர்களை தோற்கடித்தது யார்? இதையெல்லாம் சிந்திக்காமல் தவெகவுக்கு ஆதரவு தருகிறார்கள்.
அனைத்து மாநிலங்களிலும் இதைத்தான் காங்கிரஸ் செய்துவருகிறது. திமுக, அதிமுக கூட்டணி இல்லை என ஸ்டாலின் சொல்லிவிட்டார். அதேநேரத்தில் கூட்டணி குறித்து ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கிறாரோ அதை ஏற்போம். விஜய் ஆட்சி அமைக்கவிடாமல் நாங்கள் எப்படி தடுக்க முடியும்” என்றார்.