ஆர்.எஸ்.பாரதி |கோப்புப் படம்
சென்னை: “நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது?” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வியெழுப்பி உள்ளார்.
சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “தவெகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுத்துள்ளோம்” என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்து தமிழக அரசியலில் மீண்டும் பெரும் விவாதத்தை கிளப்பியது.
பகைவரை அடையாளம் காட்டிய தேர்தல் இதுதொடர்பாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: யார் நண்பர்கள், பகைவர்கள்? என்பதை எங்களுக்கு, இந்த தேர்தல் அடையாளம் காட்டி உள்ளது. மிக விரைவில் மாற்றம் வரும். அப்போது நாங்கள் யார்? என்பதை அவர்களுக்கு காட்டுவோம்.
அதிமுக என்பது ஏதோ தீண்டத்தகாத சக்தி போல் கம்யூனிஸ்டுட்கள் பேசுகிறார்கள். ஏன், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ராஜ்ய சபா எம்.பி. பதவியை வாங்கவில்லையா?. எம்எல்ஏவாக வெற்றி பெறவில்லையா?. அப்படியே நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் அதில் என்ன உலக மகா தவறு இருக்கிறது?.
மேலும் 1964-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி உடைந்து சிபிஎம், சிபிஐ என்று பிரிந்தது. எலியும், பூனையுமாக இருந்த அவர்கள் ஒருமித்த கருத்துடன் போகவில்லையா?. அதிமுக எங்களை விட்டுபிரிந்து 54 ஆண்டுகளாகி விட்டது. அதிமுக என்பது எங்களுடைய பங்காளி. பகையாளி என்பது கொள்கைரீதியாக பாஜகதான்.
தற்போது சட்டப்பேரவையில் திமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக ஒரே வரிசையில் தானே அமர்ந்துள்ளோம். இப்படி உட்கார வைத்து, காலம் கனிய வைத்துவிட்டது. 1977-ல் இருந்து அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தால் நாங்கள் எதிர்க்கட்சியாக, நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தால் அவர்கள் எதிர்க்கட்சியாக இருப்பார்கள்.
மதிமுகவும் விலகக் கூடும்: தற்போது நாங்கள் ஒன்றாக அமர்ந்திருப்பதை பார்க்கும் தொண்டர்கள் 2 கட்சிகளும் உள்ளே இணைந்து விட்டார்கள் என்று கருதுகிறார்கள். இந்த இணைப்புக்கு காரணம் திமுக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள்தான். திமுக கூட்டணியில் இருந்து மதிமுகவும் விலகல் முடிவைத்தான் எடுக்கப் போகிறது. நடந்து முடிந்த தேர்தலில் ஒரு அதிசயம் நடந்துள்ளதால், பலவீனமானவர்கள் பலியாகி விட்டார்கள். உறுதியாக இருப்பவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.