தமிழகம்

தொடர் மின்வெட்டுக்கு உண்மை காரணம் என்ன? - அரசு வெளிப்படையாக அறிவிக்க தவாக வலியுறுத்தல்

மு.வேல்சங்கர்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மின்வெட்டுக்கு உண்மையான காரணத்தை தமிழக அரசு வெளிப்படையாக மக்களிடம் அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு நாளும், குறிப்பாக இரவு நேரங்களில், தொடர்ச்சியாக நிகழும் மின்வெட்டுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை சிதைத்து கொண்டிருக்கின்றன. கடும் வெப்பத்தால் தகிக்கும் இரவு வேளைகளில், குழந்தைகள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். முதியவர்கள் மூச்சுத் திணறலோடு இரவைக் கழிக்கின்றனர்.

தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கனவுகள் இருளில் கரைகின்றன. சிறு தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மின்சாரம் என்பது வெறும் வசதி அல்ல. இன்றைய காலகட்டத்தில் அது மனிதர்களின் அன்றாட வாழ்வின் அவசியத் தேவையாக மாறியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படும் போதெல்லாம் பாதிக்கப்படுவது சாதாரண ஏழை நடுத்தர மக்களின் வாழ்க்கை மட்டுமே.

நீண்ட நேர மின்வெட்டுகளுக்கான உண்மையான காரணம் என்ன? இன்று மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் இந்த சந்தேகத்தை வெறும் அரசியல் விமர்சனமாகக் கடந்து செல்ல முடியாது. ஏனெனில், இருளில் தவிப்பது ஏழை மக்களின் வீடுகள். தேர்வை எதிர்நோக்கும் மாணவன் மெழுகுவர்த்தி ஒளியில் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நோயாளிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஆனால் இதற்கான தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் கள்ள மவுனம் காக்கின்றனர்.

மக்கள் கேட்பது மின்சாரத்தை மட்டும் அல்ல. உண்மையையும், வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வையும்தான். எனவே, தொடர் மின்வெட்டுக்கு உண்மையான காரணங்களை வெளிப்படையாக மக்களிடம் தமிழக அறிவிக்க வேண்டும். இதுதவிர, இவ்விவகாரத்தில் தமிழக அரசு உடனடி மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் கைது செய்யப்பட்டிருப்பதற்கும், எழுத்தாளர் தீபச்செல்வன் பிரதீபனின் 5 புத்தகங்களைப் பறிமுதல் செய்தற்கும் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT