கோப்புப் படம்
சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மார்ச் 28-ம் தேதி முதல் மார்ச் 30-ம் தேதி வரை 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானியும், அதிகாரியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மார்ச் 24) முதல் மார்ச் 26-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 27-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மார்ச் 28-ம் தேதி முதல் மார்ச் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் (மார்ச் 24, 25) அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு.
அதேநேரத்தில், இந்தப் பகுதிகளில் மார்ச் 26-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் இன்றும், நாளையும் (மார்ச் 24, 25) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.