தமிழகம்

தமிழகத்தில் மார்ச் 6, 7-ல் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு!

மு.வேல்சங்கர்

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

          

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மார்ச் 7-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை:

மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிபடியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (மார்ச் 3,4) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

SCROLL FOR NEXT