படம்: வி.எம்.மணிநாதன்
சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.9) முதல் ஆக.14-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆக.9) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். 10 முதல் 14-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 10 முதல் 12-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாகவும், இதர தமிழகத்தில் வழக்கமான அளவை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பவானியில் 8 செமீ, விண்ட் வொர்த் எஸ்டேட், அவலாஞ்சி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 4 செமீ, நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, மேல் கூடலூரில் தலா 3 செமீ, தேவாலா, நடுவட்டம், கோவை மாவட்டம் சின்கோனா, வால்பாறை, சோலையார், பெரம்பலூர் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.