சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்’ எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் விஜய், ‘முதல்வராக நான் பொறுப்பேற்றதையொட்டி, தனது கனிவான வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது மக்களின் நலனும் முன்னேற்றமுமே எங்களின் ஒரே குறிக்கோளாகும். தமிழ்நாட்டின் தொடர் வளர்ச்சிக்கு, ஒன்றிய அரசின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இன்று நடந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அவர் விழா மேடையில் விஜய்யின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.