செந்தில் பாலாஜி
கரூர்: 2021-ம் ஆண்டு தேர்தலை விட கரூர் மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் மிக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 73-வது பிறந்த நாளையொட்டி கரூர் மாநகராட்சி 47-வது வார்டான கோடங்கிப்பட்டியில் இன்று சில்வர் அண்டா பரிசு வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்து மக்களுக்கு பரிசு வழங்கினார். கரூர் மாநகராட்சி துணை மேயர் ப.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது: முதல்வர் ஸ்டாலின் 73-வது பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 3.30 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 1 வார காலத்திற்குள் இப்பணிகள் நிறைவடையும்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மேலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களை சந்திக்கும் போது அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அவர்கள் முதல்வருக்கு தங்கள் முழு ஆதரவை தெரிவிக்கின்றனர்.
2021-ம் ஆண்டு தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னம் வெற்றி பெற்றது. 2026-ம் ஆண்டு தேர்தலிலும் 4 தொகுதிகளிலும் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட மிக அதிக வாக்குகள் பெற்று உதய சூரியன் வெற்றி பெறும்.
காங்கிரஸ் கூட்டணி குறித்து எதிர்க்கட்சி ஆசைகளை தெரிவித்திருந்தன. தோழமை கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து அரவணைத்துச் செல்பவர் முதல்வர். அதனை தேர்தல் கூட்டணியாக கருதாமல் தொடர்ந்து தோழமையுடன் தொடர்வார்.
தோழமை கட்சிகளுக்கு உரிய மரியாதை வழங்குவதில் இந்தியாவிலே சிறந்த ஆளுமையாக திகழ்பவார். சில நேரங்களில் தோழமை கட்சிகள் மாற்றுக் கருத்துகள் கொண்டிருந்தாலும் அவர்களை அரவணைத்து செல்வார்.
பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள திமுகவை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள 1,111 வாக்குச் சாவடிகளிலும் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ திட்டத்தில் மகளிர் வீடு வீடாக சென்று அரசு திட்டங்களை எடுத்துச் சொல்லி வருகின்றனர்.
எதிர்பார்ப்பதற்கு மேலாக 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்று 2-வது முறை ஸ்டாலின் முதல்வராவார் என்றார்.