முதல்வர் ஸ்டாலின் மற்றும் கேஜ்ரிவால் 
தமிழகம்

‘விசாரணை அமைப்புகளின் மாண்பை அடகு வைப்பதை நிறுத்த வேண்டும்’ - கேஜ்ரிவால் விடுதலை குறித்து ஸ்டாலின் கருத்து

வெற்றி மயிலோன்

சென்னை: “ஒன்றிய பாஜக அரசு குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக விசாரணை அமைப்புகளின் மாண்பை அடகு வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என அரவிந்த் கேஜ்ரிவால் விடுதலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஒன்றிய பாஜக அரசு குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக விசாரணை அமைப்புகளின் மாண்பை அடகு வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சிறிதேனும் வெட்கம் கொள்ளுங்கள்.

          

நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாக உண்மை வெளிப்படும் வரை அனைத்து நெருக்கடிகளையும் உறுதியோடு எதிர்கொண்ட மதிப்பிற்குரிய நண்பர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவுக்கு எனது பாராட்டுகள்’ எனத் தெரிவித்தார்.

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று விடுவித்தது.

இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், ‘‘நான் ஊழல்வாதி அல்ல. கேஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் முற்றிலும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. உண்மை வெற்றி பெறும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். இந்திய சட்ட அமைப்பின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

அமித் ஷாவும் மோடியும் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக்கட்ட மிகப் பெரிய சதித்திட்டத்தை தீட்டினார்கள். ஆம் ஆத்மி கட்சியின் 5 பெரிய தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். முதல்வர் பதவியில் இருந்த ஒருவர், வீட்டில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு செய்தி சேனலிலும் நாங்கள் ஊழல்வாதிகள் என்று அழைக்கப்பட்டோம். கேஜ்ரிவால் ஊழல்வாதி அல்ல. நான் என் வாழ்க்கையில் நேர்மையை மட்டுமே சம்பாதித்துள்ளேன். இன்று, கேஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும், ஆம் ஆத்மி கட்சியும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தையும், அத்தகைய ஒரு அரசியலமைப்பை நமக்கு வழங்கிய பி.ஆர். அம்பேத்கரையும் நினைத்து நாங்கள் மீண்டும் பெருமைப்படுகிறோம். உண்மை மீண்டும் வென்றுள்ளது’’ என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT