சென்னை: ‘2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய தமிழக மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவணங்கி ஏற்கிறது’ என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நடைபெற்று முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய தமிழக மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவணங்கி ஏற்கிறது.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் எஸ்.காமராஜ், பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் சவுமியா அன்புமணி உட்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்காக அயராது உழைத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், எங்களின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்நேரத்தில் உரித்தாக்கிக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.