பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைவதை ஏற்றுக் கொண்ட வி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் இந்திய வீரர்கள். (கோப்பு படம்)
கோவை: வங்கதேசத்தை உருவாக்க பாகிஸ்தானுக்கு எதிராக 1971-ல் நடந்த போர் வெற்றியில் முக்கிய பங்காற்றிய பிரிகேடியர் வி.ஆர். சுவாமிநாதன் கோவையில் காலமானார். அவருக்கு வயது 95.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையைச் சேர்ந்தவர் வி.ஆர். சுவாமிநாதன். இவர், இந்திய ராணுவத்தில் பிரிகேடியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பின்னர், வி.ஆர்.சுவாமிநாதன் கோவை வடவள்ளியில் உள்ள, குடியிருப்பில் மனைவி வசந்தியுடன் வசித்து வந்தார். இவருக்கு மகள்கள் தரங்கிணி, தீபா, ஜோதி ஆகியோர் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி காலமானார். அதைத் தொடர்ந்து சுவாமிநாதன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், முதுமை காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர், அவரை சிகிச்சைக்காக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று அதிகாலை சுவாமிநாதன் காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் அவரது உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட உள்ளது.
காலமான பிரிகேடியர் வி.ஆர்.சுவாமிநாதன், 1949-ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து 4 ஆண்டுகால பயிற்சியை முடித்தபிறகு, 2-ம் லெப்டினன்ட் அதிகாரியாக 1952-ல் பணியை தொடங்கினார். பின்னர் கேப்டன், மேஜர், லெப்டினன்ட், கர்னல் ஆகிய நிலைகளில் அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்று திறம்பட பணியாற்றினார்.
தொடர்ந்து பிரிகேடியராக பதவி உயர்வு பெற்ற அவர் 1986-ல் ஓய்வு பெற்றார். ‘22 மராத்தா லைட் இன்பேன்ட்ரி’ படைப்பிரிவில் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய அவர், முக்கியப் போர்களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியுள்ளார். குறிப்பாக, வங்கதேச பிரிவினை தொடர்பாக 1971-ல் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. இந்தப் போரில் வி.ஆர்.சுவாமிநாதன் பங்கேற்று தனது படைக்கு தலைமை வகித்து வெற்றிகரமாக பாகிஸ்தானுக்கு எதிரான போரை முடித்தார்.
ஹில்லி பகுதியில் பாகிஸ்தான் படையை தோற்கடித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள், இவரது முன்னிலையில் சரணடைந்தனர். இந்த போருக்கு பின்னரே வங்கதேசம் உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 1965-ல் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போரில், மேஜர் பொறுப்பில் இருந்து போரில் ஈடுபட்டார். எந்த போராக இருந்தாலும், இவரது '22 மராத்தா லைட் இன்பேன்ட்ரி’ படைப்பிரிவு தான் முதலில் செல்லும்.
அவரது குடும்பத்தினர் கூறும்போது, வி.ஆர்.சுவாமிநாதனின் தந்தை ராணுவத்தில் மருத்துவராக இருந்தார். ராணுவத்தின் மீது இருந்த ஈர்ப்பு காரணமாக தனது இளம் வயதிலேயே இந்திய ராணுவத்தில் இணைந்தார். அந்தக் காலத்தில் கடும் பயிற்சிகளை முடித்து பணியில் சேர்ந்தார் என்றனர். இவரது இறுதிச் சடங்கு கோவை வடவள்ளியில் இன்று நடைபெறுகிறது.