படம்:ம.பிரபு

 
தமிழகம்

சென்னை | மாநில கணக்காயரை கண்டித்து தொழிற்கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மாநில கணக்காயரின் நடவடிக்கையை கண்டித்து சென்னையில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வுபெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான தர ஊதியம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு மாநில கணக்காயரின் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் எம்.ராஜாராம் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் வி.கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன், முன்னாள் பொதுச் செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, அமைப்புச் செயலாளர் சோ.சம்பத் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

‘தொழிற்கல்வி ஆசிரியர்கள் பெற்றுவந்த ரூ.5,400 தர ஊதியத்தை, ஓய்வுபெறும்போது ரூ.4,800 ஆக குறைத்து 12 ஆண்டுகள் கழித்து மாநில கணக்காயர் உத்தரவிட்டுள்ளார். இது அரசாணை எண் 306-க்கு எதிரானது. எனவே, இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.

கடந்த 2001 ஜனவரி 1-ம் தேதிக்கு முன்னர் தேர்வு நிலை பெற்ற மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் தொடர்ந்து ரூ.5,400 தர ஊதியம் பெறும் வகையில் மாநில கணக்காயர் அலுவலகத்துக்கு தமிழக அரசு உடனடியாக தகவல் அனுப்ப வேண்டும்’ என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT