படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: சென்னையில் அனுமதிக்கப்பட்ட சாலைகளில் ஊர்வலமாக சென்று விநாயகர் சிலைகள் கடலில் நேற்று கரைக்கப்பட்டன. தொடர்ந்து இன்றும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ள நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க 16,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னையில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் பல்வேறு அமைப் புகளின் சார்பில் மொத்தம் 1,562 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த 5 நாட்களாக சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், அவற்றை நேற்று மற்றும் இன்று கடலில் கரைக்க காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 அனுமதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சியுடன் இணைந்து செய்யப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக சிவசேனா மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, நேற்று கடலில் கரைக்கப்பட்டன. தொடர்ந்து இந்து முன்னணி உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்கப்படுகின்றன.
இதற்காக கடற்கரைகளில் 80 டன், 20 டன் ராட்சத கிரேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் 16,500 அதிகாரிகள், காவலர்கள், 2,000 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.