தமிழகம்

‘விளாத்திகுளம் எம்எல்ஏ அராஜகமான முறையில் கைது’ - தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்

மு.சக்தி

சென்னை: விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18ம் தேதி இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன், முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதைத் தொடர்ந்து நேற்றிரவு (ஜூலை- 19) அவர் மீது புகார் அளிக்க தவெகவினர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு திரண்டனர். ஆனால் புகார் எதுவும் வழங்காமல் திரும்ப சென்று விட்டனர். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, இன்று காலை எம்எல்ஏ மார்க்கண்டேயனை, அவரது இல்லத்தில் வைத்து கைது செய்த போலீஸார், காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், கொலை மிரட்டல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்று பேசுவது, இரண்டு அமைப்பு அல்லது கட்சிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ கைதினை கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: ”சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல் துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயனை விடுதலை செய்ய வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT