பிரேமலதா சாமி தரிசனம்
கடலூர்: “குதிரை பேரம் இல்லை என்றால், முகத்தை மூடிக் கொண்டு சென்றது யார்? அதிமுகவின் ஓர் அணியை அவரே சந்திக்கிறார். குதிரை பேரம் இல்லை என முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக விருத்தாசலம் வந்தார். பின்னர் அவர் விருத்கிரிஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கேட்டு பெறுவேன். விருத்தாசலத்தை மாவட்டமாக மாற்றுவதே எனது முதல் கோரிக்கையாக, தேர்தல் வாக்குறுதியிலும் சொல்லி இருக்கிறேன்.
சட்டப்பேரவையில் பேசி முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வேன். வெற்றியை தந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் ரீல்ஸ் சோஷியல் மீடியா மோகத்தில் உள்ளனர். முதல்வர் அலுவலகத்திலேயே இதுபோல் நடக்கிறது. மக்கள் புரிந்துகொண்டால் சரி” என்றார்.
மருந்து வணிகர்கள் போராட்டம் பற்றி கேட்டதற்கு, “அவர்களின் வியாபாரம் பாதிப்பு அடைவது குறித்து, அதனை மேம்படுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடை அடைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கையை நியாயமாக இருப்பதால் அந்தப் பக்கம் தேமுதிக நிற்கும். அவர்களுடைய போராட்டம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற உறுப்பினர் கல்வி தகுதி பற்றி கேட்டதற்கு, “இந்த கேள்வியை என்னிடம் கேட்கக் கூடாது. தமிழக வெற்றி கழகத்தையும், தமிழக அரசையும் தான் கேட்க வேண்டும். வேட்பாளரை யார் என்று தெரியாத நிலை தமிழகம் முழுவதும் உள்ளது. இதனை மக்கள் புரிந்துகொண்டால் போதும்” என்றார்.
ராதன் பண்டிட் குறித்து பேசியதும், “அவரை மாற்றியதற்கும் வாழ்த்துகள். அரசாங்கம் நல்ல விஷயத்தை முன்னெடுத்தால் வரவேற்கும் முதல் கட்சி தேமுதிகவாகத்தான் இருக்கும். 717 மதுக்கடைகள் மூடியதற்கு வாழ்த்துகள். சிங்கப்பெண் படை, மீனவர்கள் பிரச்சினைக்கு கடிதம் எழுதியதற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளேன்.
குதிரை பேரம் இல்லை என்றால் முகத்தை மூடிக் கொண்டு சென்றது யார்? அதிமுகவின் ஓர் அணியை அவரே சந்திக்கிறார். குதிரை பேரம் இல்லை என முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நிபந்தனையற்ற ஆதரவு போல அதிமுக அணியும் அறிவிக்க வேண்டும். திமுக கூட்டணி நிபந்தனையற்ற ஆதரவு போல, அதிமுக அணியும் அறிவிக்க வேண்டும்.
பெட்ரோல் டீசல், விலை உயர்வு ஆபத்து. மிகப் பெரிய பொருளாதார சீரழிவு. மீண்டும் ஒரு லாக்டவுன் வரும். சிலிண்டர் தட்டுப்பாடு, விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வையும் கட்டுப்பாடுத்தி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10 லட்சம் கோடி கடன் என்று முதல்வர் கூறுகிறார். அனைத்தையும் சரிசெய்ய வேண்டும். அவரை நம்பி வாக்களித்தவர்களுக்கு நல்ல ஆட்சியை தர வேண்டும்” என்றார்.