சென்னை: “தவெக அரசு அமைந்ததில் இருந்து கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. கமிஷன், கரப்ஷன் என்ற சொற்களுக்கு இடமில்லாமல் ஜோசப் விஜய் அரசு இயங்குகிறது என்பது என்னுடைய கருத்து.” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: தவெக அரசு அமைந்ததில் இருந்து கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது மக்கள் மனதை குளிர்விக்கக் கூடிய ஆரோக்கியமான நிர்வாகம். கமிஷன், கரப்ஷன் என்ற சொற்களுக்கு இடமில்லாமல் ஜோசப் விஜய் அரசு இயங்குகிறது என்பது என்னுடைய கருத்து.
உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்ற 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக வரும் யூகங்களுக்கு பதில் சொல்ல இயலாது. அவர்களின் நிலைப்பாடு பற்றி இப்போது ஏதும் சொல்ல முடியாது. மனதில் தோன்றுவதை எல்லாம் சொல்ல முடியுமா?.
வரும் தேர்தல்களில் கூட்டணி குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து நான் சொன்னதை கவனமாக கேட்டுக் கொண்டார். அவர் அதற்கு அனுமதி தரமாட்டார் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. முதல்வர் விஜய் எளிமையாக, இயல்பாக, வெளிப்படைத் தன்மையோடு இருக்கிறார். நல்லது நடந்தால் வரவேற்பேன். அல்லது நடந்தால் எதிர்ப்பேன்” என்று கூறினார்.