விஜய்

 
தமிழகம்

புதுச்சேரியில் 11 நிபந்தனைகள் உடன் விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்துக்காக புதுச்சேரி வர இருக்கிறார். அவரது பிரச்சாரத்துக்கு 11 கடும் நிபந்தனைகளை காவல் துறை விதித்துள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, வரும் 5-ம் தேதி, 23 இடங்களில் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்டு காவல் துறை தலைமையகத்தில் புதுச்சேரி மாநில தவெக நிர்வாகி புதியவன் கடிதம் கொடுத்திருந்தார்.

காவல் துறை அதிகாரிகள் இதுதொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தினர். 5-ம் தேதி தேதி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் புதுவைக்கு வருவதால் அன்றைய தினம் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வழங்குவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

          

எனவே அதற்கு முந்தைய நாள் 4-ம் தேதி விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதில், 4 இடங்களில் மட்டும் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுவைக்கு வரும் விஜய், கொக்கு பார்க், வெங்கடசுப்பா ரெட்டி சிலை சதுக்கம், தவளக்குப்பம் சந்திப்பு, வில்லியனூர் - கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மட்டும் வேனில் இருந்தபடி பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 1.30 மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சார இடத்திலும், சுமார் 2 ஆயிரம் பேர் மட்டும் இருக்க வேண்டும். தமிழக ரசிகர்கள், தமிழக தொண்டர்கள் புதுச்சேரி பிரச்சாரத்துக்கு வரக்கூடாது. புதுவையைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும்.

விஜய் பேசும் இடங்களில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. வாட்டர் பாட்டில், பிஸ்கட் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி செய்து இருக்க வேண்டும். எங்கு அனுமதி வழங்கப்பட்டதோ, அங்கு மட்டும்தான் வேன் மேலே நின்று பேச வேண்டும். மற்ற இடங்களில் வேனின் மீது ஏறக்கூடாது.

ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் பிரச்சார வேனை பின் தொடரக்கூடாது. அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்குள் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை செல்ல வேண்டும் என்பன போன்ற 11 நிபந்தனைகளை புதுவை காவல் துறை விதித்துள்ளது.

SCROLL FOR NEXT