சென்னை: தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் நடத்தியதாக கைதான 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்றைக்கு தள்ளி வைத்துள்ளது.
சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானத்தின்போது தங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளக்கூறி ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம், ரூ.35 கோடி தருவதாக குதிரை பேரம் நடத்தியதாக பதியப்பட்ட வழக்கில் 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதில் திமுகவை சேர்ந்த நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருவல்லிக்கேணி போலீஸார் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது சம்பந்தப்பட்ட மூவரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். திருவல்லிக்கேணி சரக காவல் உதவி ஆணையர் அழகு, இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட மூவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுவது என்பதுதீவிரவாதத்துடன் தொடர்புடையது.
ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாக போலீஸார் கற்பனை அடிப்படையில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். புகாரின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர். அரசியல் காரணங்களுக்காக தீய நோக்கத்துடன் வழக்கு புனையப்பட்டு இருப்பது
தெளிவாகிறது. தற்போது மூவரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே, இவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி, “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, கைதான அனைவரும் விலை உயர்ந்த ஐபோன்களை பயன்படுத்தி உள்ளனர். அதன்மூலம் அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் அழித்துள்ளனர்.
ஒருநபர் சிங்கப்பூரில் இருந்து கொண்டு அங்கிருந்தபடி தகவல்களை அழித்துள்ளார். எம்எல்ஏ-வுக்கு தருவதாக கூறப்பட்டுள்ள ரூ. 35 கோடி சிறிய தொகை கிடையாது. இந்தப் பணம் யாருடையது, எங்கிருந்து வருகிறது என்பதை முழுமையாக ஆராய வேண்டியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டியுள்ளது. 3 பேரையும் காவலி்ல் எடுத்து விசாரித்தால் மட்டுமே புலன் விசாரணை முழுமையடையும்” என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரிடமும் போலீஸ் காவலில் செல்வதற்கு ஆட்சேபம் உள்ளதா எனக்கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர்கள், ஏற்கெனவே போலீஸார் தங்களது வீடுகளில் சோதனை நடத்தி, மிரட்டி வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியுள்ளதாகவும், தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸாரின் காவலுக்கு அனுப்பக்கூடாது என்றும் ஆட்சேபம் தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு (ஜூலை 8) தள்ளி வைத்துள்ளார்.