சென்னையில் சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களான மா.சுப்பிரமணியன் மற்றும் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா ஆகியோரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 6 தினங்களாக தென் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன். அப்போது பல கிராமங்களுக்கு சென்றேன். அங்குள்ள மக்களின் மனநிலை திமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பதாகவே இருக்கிறது. வரலாறு காணாத வெற்றியை திமுக கூட்டணி பதிவு செய்யும். அதற்கு காரணம் மக்களிடையே முதல்வரின் நலத்திட்டங்கள், தேர்தல் அறிக்கை என அனைத்தும் பேசுபொருளாகியிருப்பது தான்.
சென்னையை பொறுத்தவரை இது திமுகவின் கோட்டை. சென்னை மக்கள் எப்போது சாதி, மத அரசியலை, பதற்ற அரசியலை விரும்பமாட்டார்கள். உலகில் எங்கிருந்து வந்தாலும் எல்லோரையும் கூடி அரவணைத்து கொள்கிற பழக்கம் சென்னைக்கு உண்டு. இங்கு பிளவுவாத கருத்தாளர்களுக்கு இடமில்லை. அவர்களை தோற்கடிப்பார்கள். அந்தவகையில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு தோல்வி உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.