தமிழகம்

விசிகவை ஒழிக்க கங்கணம் கட்டும் பட்டியலின அமைச்சர்கள்: மாணவரணி துணைச் செயலாளர் ஆதங்கப் பதிவு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் விசிக அங்கம் வகிக்கிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, 4 தொகுதிகளில் வென்றது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் அடிப்படை கட்டமைப்பை வலுவாக வைத்திருக்கும் கட்சி விசிக. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள விசிக, அதை தக்கவைக்க இந்தத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறது. ஆனால், திமுக கூட்டணியில் அதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தெரியவில்லை.

          

விசிக-வுக்கு அதிகபட்சம் 8 இடங்கள் கிடைக்கலாம் என்று வரும் செய்திகளால் விசிக நிர்வாகிகள் தாங்க முடியாத மனப்புழுக்கத்தில் இருக்கிறார்கள். கூட்டணி தர்மத்துக்காக எத்தனை காலம் தான் இப்படி விட்டுக் கொடுத்துக் கொண்டே போவது என அவர்கள் ஆங்காங்கே அதிருப்திகளையும் வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக விசிக மாணவரணி துணைச் செயலாளர் நெப்போலியன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘திமுக-வில் இருக்கிற நாயுடு சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் தேமுதிக-வை கூட்டணிக்கு கொண்டுவந்து அதிக தொகுதிகளை வாங்கித் தந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர பகிரங்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

திமுக-வில் இருக்கும் பட்டியலின அமைச்சர்கள், நிர்வாகிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எப்பாடு பட்டாவது விசிக-வை காலி செய்து விட வேண்டும் அவர்களை ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களைத் தான் நாம் பார்க்க முடிகிறது. திமுக-வில் லாபி செய்வதற்கு நமக்கு யாரும் இல்லை. நம் தலைவர்தான் நமக்காகப் பேசிப் பேசி தொகுதிகளை அதிகம் பெற்றாக வேண்டும்’ என பதிவிட்டிருப்பதும் இப்போது விசிக வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாகி வருகிறது. - கே.ஜி.யுவராஜ்

SCROLL FOR NEXT