திருமாவளவன் பிரச்சாரம் 

 
தமிழகம்

“விசிக தவிர்க்க முடியாத கட்சியாக இருப்பதற்கு திமுகவும், கூட்டணிக் கட்சிகளுமே காரணம்” - திருமாவளவன்

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “தவிர்க்கமுடியாத அரசியல் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் திமுகவும், கூட்டணி கட்சிகளும்தான். தமிழகத்தில் 8 தொகுதிகளில் போட்டியிடும் நாம், வெற்றி பெற வேண்டும் என கூட்டணி கட்சிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றார்கள். ஆகவே, திமுக தோழமைக் கட்சி வேட்பாளர்களை நாம் வெற்றி பெற வைக்க வேண்டும்,” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான சாக்கோட்டை க.அன்பழகனுக்கு வாக்கு கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், நடிகரின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றார்கள் என அண்மையில் சில வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. சினிமா மயக்கம் இல்லாதவர்கள், கொள்கை பிடிப்புள்ளவர்கள் நீங்கள் என்பது எனக்கு உறுதியாக தெரியும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சியாக அங்கீரிகபட்டதற்கு வாக்கு ஒரு காரணமாக இருந்தாலும், கூட்டணி கட்சிகளும் காரணம். நாடு சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளில் தென் இந்தியாவிலேயே அங்கீகாரம் பெற்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான்.

தவிர்க்கமுடியாத கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் திமுகவும், கூட்டணி கட்சிகளும்தான். தமிழகத்தில் 8 தொகுதிகளில் போட்டியிடும் நாம், வெற்றி பெற வேண்டும் என கூட்டணி கட்சிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றார்கள். ஆகவே, திமுக தோழமைக் கட்சி வேட்பாளர்களை நாம் வெற்றி பெற வைக்க வேண்டும்.

அதிமுக தற்போது அமித்ஷா அதிமுகவாக மாறி விட்டது. பாஜக-அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை அடிப்படையில் உறவு இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றார். ஆனால் அவர் காலமாகி விட்டார் என்ற துணிச்சலில் பாஜகவுடன், பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார். இது ஜெயலலிதாவிற்கு செய்த துரோகமாகும்.

திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என பாஜக திட்டமிட்டு, நண்பர் விஜயை களம் இறக்கி விட்டுள்ளார்கள். அவருடன் ஆர்எஸ்எஸ் உறவில் இருக்கின்றது என்றால் பாஜகவுடன் உறவு என்பது அர்த்தம். நண்பர் விஜய், கட்சி தொடங்கி 3 ஆண்டுகளில் இதுவரை அவர் பேசியது, திமுக வெறுப்பு, திமுக பற்றி தான் பேசியுள்ளார். ஆனால் விஜய், மோடி, அமித்ஷா ஆகியோரையும், சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்டவைகளை பற்றி பேசவில்லை. அவர் பாஜக கொள்கை எதிரி என்ற ஒரு வார்த்தை தவிர வேறு எதுவும் பேசமாட்டார்.

அதிமுக - பாஜக கூட்டணியை வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பது தான் விஜய்யின் நோக்கமாகும். கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் வாக்கு திமுக கூட்டணிக்கு சென்று விடக்கூடாது என களம் இறக்கி விடப்பட்டவர் விஜய். அவருக்கு வாக்கு செலுத்தினால், பாஜகவிற்கு செலுத்துவதாகும். பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முகமூடி அணிந்து வருகிறார்கள். எனவே, கும்பகோணம் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகனுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT