திருமாவளவன்
சென்னை: “தவெக ஆதரவு குறித்து இன்று மாலை இணையவழியில் ஆலோசனை நடைபெறுகிறது. எங்கள் முடிவை நாளை பத்திரிகையாளர்களை அழைத்து அறிவிப்போம்” என விசிக பொதுச்செயலாளர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தனித்து நின்று 108 இடங்களை வென்றும் ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கிறார் விஜய். அறுதிப் பெரும்பான்மைக்காக, இப்போது திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் தயவை நாடி நிற்கிறார் விஜய். தற்போது அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ளது. இது தொடர்பாக தவெக தரப்பில் இருந்து கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் பேசி வருகிறார்கள். அதேபோல் விசிக தலைவர் திருமாவளவனிடம் ஆதரவு கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் நேரடியாக ஆதரவு தருவதாக சொல்லவில்லை.
இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தவெகவை ஆதரிப்பது குறித்து இதுவரை முடிவு எட்டப்படவில்லை. இன்று மாலை விசிக உயர் நிலைக் கூட்டம் நடைபெறுகிறது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்துகளை அறிய வேண்டியது எனது கடமை. அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளனர். அதனால், மாலையில் ஜூம் மீட் வழியாக ஆலோசனை நடைபெறும். அவர்கள் முடிவுகளை, விருப்பங்களைக் கேட்காமல் என்னால் முடிவெடுக்க முடியாது. என்ன முடிவு எடுக்கிறோம் என்பதை நாளை காலை பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவிப்பேன்.
இத்தனை காலம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பயணித்திருக்கிறோம். அதனால் நாங்கள் ஸ்டாலினை சந்தித்தோம். தவெக ஆட்சியமைக்க இடையூறாக இருக்கமாட்டோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றைய சந்திப்பின் போது எங்களிடம் கூறியுள்ளார். மேலும், மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்க வேண்டியது நம் கடமை என்றும் தெரிவித்தார்.” இவ்வாறு திருமாவளவன் கூறினார்.