தமிழகம்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்துவது, வருவாய்த் துறை உதவியாளர் பதவி உயர்வில் 50 சதவீத ஒதுக்கீடு உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) நேரடி நியமன முறையில் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக மாற்றியமைப்பது, உதவியாளர் பதவி உயர்வில் தற்போதைய 30 சதவீத ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்துவது, பதவி உயர்வு காலவரம்பை 3 ஆண்டாகக் குறைப்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் 3 நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை, சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் முன்பு கடந்த புதன்கிழமை தொடங்கினர்.

          

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் அதன் தலைவர் வே.சசிகுமார் தலைமையில் நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மண்டலவாரியாக போராட்டம்: முதல் நாளில் மேற்கு மண்டலம் மற்றும் டெல்டா மண்டல பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களும், 2-வது நாளான நேற்று வடக்கு-மத்திய மண்டலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

மாநில பொதுச்செயலாளர் சி.குமார், பொருளாளர் வ.தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கடைசி நாளான இன்று (வெள்ளி) நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் தென்மண்டல பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.

SCROLL FOR NEXT