சென்னை: கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்துவது, வருவாய்த் துறை உதவியாளர் பதவி உயர்வில் 50 சதவீத ஒதுக்கீடு உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) நேரடி நியமன முறையில் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக மாற்றியமைப்பது, உதவியாளர் பதவி உயர்வில் தற்போதைய 30 சதவீத ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்துவது, பதவி உயர்வு காலவரம்பை 3 ஆண்டாகக் குறைப்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் 3 நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை, சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் முன்பு கடந்த புதன்கிழமை தொடங்கினர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் அதன் தலைவர் வே.சசிகுமார் தலைமையில் நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மண்டலவாரியாக போராட்டம்: முதல் நாளில் மேற்கு மண்டலம் மற்றும் டெல்டா மண்டல பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களும், 2-வது நாளான நேற்று வடக்கு-மத்திய மண்டலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
மாநில பொதுச்செயலாளர் சி.குமார், பொருளாளர் வ.தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கடைசி நாளான இன்று (வெள்ளி) நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் தென்மண்டல பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.