திருச்சி: போதைப் பொருட்களுக்கு எதிராகவும், சமத்துவ சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் வரும் ஜன. 2-ம் தேதி திருச்சியிலிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடைபயணம் தொடங்குகிறார். இதற்கான தொண்டர்கள் தேர்வு திருச்சியில் நேற்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். கல்லூரி வரை வந்த போதைப் பொருள் இன்று பள்ளி வரை வந்துவிட்டது. இளம் வயதிலேயே சாதி, மத கருத்துகளை விதைப்பதால் மாணவர்களிடம் மோதல்கள் நடைபெறுகின்றன.
அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும். தற்போது மேற்கொள்ளும் நடைபயணத்தின்போது திமுக ஆட்சிக்கு ஆதரவு கோரி பிரச்சாரம் மேற்கொள்வேன். என் மூதாதையர் சேர்த்த கோடிக்கணக்கான சொத்துகளை பொதுவாழ்வுக்கு வந்த பின்னர் இழந்தேன்.
அதை இழப்பாக நான் கருதவில்லை. என் நாணயம் குறித்து எதிர்க்கட்சிகள்கூட முன்வைக்காத குற்றச்சாட்டை மல்லை சத்யா முன்வைத்துள்ளார். பொய்களால் எங்களை கொச்சைப்படுத்த முடியாது. இவ்வாறு வைகோ கூறினார்.