படம்: ஜெ.மனோகரன்

 
தமிழகம்

எஸ்ஐஆர் என்பது மத்திய அரசின் ஜனநாயக மோசடி: வைகோ குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

‘எஸ்ஐஆர்’ என்பது தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி மத்திய அரசு செய்த மிகப் பெரிய ஜனநாயக மோசடி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கோவை உள்ளிட்ட 19 நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது திடீரென இத்திட்டம் கோவையில் செயல்படுத்தப்படாது என தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் முதலில் 10 லட்சம் பேருக்கு மேல் மக்கள் தொகைஉள்ள நகரங்களை தேர்வு செய்தனர். தற்போது 20 லட்சத்திற்கும் குறைவாக மக்கள் தொகை உள்ள பாட்னா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை இத்திட்டத்தின் கீழ் சேர்த்து பணிகளை தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரமான கோவை தொழில் நகரமாகும். கோவை நகரில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டுக்கு, மத்திய அரசு செய்த துரோகம். எனவே இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்காக நவம்பர் 24-ம் தேதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளோம். எனவே மத்திய அரசு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

எஸ்ஐஆர் என்பது தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி மத்திய அரசு செய்த மிகப் பெரிய ஜனநாயக மோசடி. பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்தி யுள்ளார். எனவே 2026 தேர்தலுக்கு பின் அவரின் ஆட்சி தொடர வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT