வைகோ
சென்னை: “தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் வந்தே மாதரத்திற்கு இடம் கொடுக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும், பிறகு தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம், மேலும், மும்மொழிக் கொள்கையை எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது.” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, “மும்மொழிக் கொள்கையை எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வந்தே மாதரத்தை கொண்டு வந்து அவர் திணிக்கிறார்.
தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் வந்தே மாதரத்திற்கு இடம் கொடுக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும், பிறகு தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்தி கூறி வருகிறோம்.
தவெக ஆட்சிக்கு ஆறு மாத காலம் அவகாசம் கொடுப்போம். அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். அவர்களும் போகப்போக படிப்பிணைகளை கற்றுக் கொள்வார்கள். திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. காங்கிரஸ் பிரிந்து சென்றதால் திமுகவுக்கு எந்த பின்னடைவும் கிடையாது. காங்கிரஸ் இருக்கும் இடத்தில்தான் மதச்சார்பின்மை காக்கப்படுகிறது எனச் சொல்ல முடியாது.
மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல கட்சியைச் சார்ந்தவர்கள் மதச்சார்பின்மையை காத்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலம் தவெக ஆட்சியைப் பிடித்து விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது, அவர் மனதில் இருந்து சொல்வது. அதே கருத்தை யாரெல்லாம் சொல்கிறார்களோ அவரவர் விருப்பத்திற்கு சொல்லலாம். அந்த கருத்துக்கு நான் ரியாக்ஷன் கொடுக்க விரும்பவில்லை.
நாங்கள். கடந்த ஆறு மாத காலமாக எங்களது இணையத்தை வலுப்படுத்தி இருக்கிறோம். அதிமுக அரசமைக்குமா, திமுக ஆதரவு கொடுக்குமா என்ற குழப்பம் பல நாட்களாக நீடித்து வருகிறது. இது குறித்து பரவலாக பேசப்படுகிறது. இது குறித்து நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்ப வில்லை.
மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் ஒரே அரசு, என்கிற போக்கு தமிழகத்துக்குள் பிரவேசிக்க முடியாமல் அவர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளது. கேரளாவிலும் அவர்களால் சாதிக்க முடியவில்லை. வருகிற நாட்களிலும் பாஜகவின் அஜெண்டாவை நிறைவேற்றுவதற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம்” என்றார்.