வைகோ

 
தமிழகம்

உள்ளாட்சி தேர்தல் குறித்து, அந்த நேரத்தில் நிர்வாகக் குழு கூட்டம் கூட்டி அறிவிப்போம்: வைகோ

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து, அந்த நேரத்தில் நிர்வாகக் குழு கூட்டம் கூட்டி அறிவிப்போம். அதே நேரத்தில் தற்போது திமுகவுடன் கூட்டணி தோழமை தொடர்கிறது என்று வைகோ தெரிவித்தார்.

கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர், “தமிழக மக்களின் ஆவேசத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும் என்ற எண்ணம் மேகேதாட்டு விவகாரத்தில் வந்தால் அன்றி வேறு வழியில்லை. மேகேதாட்டில் அணை கட்ட அனுமதிக்ககூடாது என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜூன் 2-ம் தேதி சென்னையில் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதே போல் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ஜூன் 5-ம் தேதி விவசாயிகள் பிரச்சினை மற்றும் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டம் நடைபெறுகிறது.

தமிழக தற்காலிக ஆளுநர், திமிர் பிடித்து சர்வதிகாரியாக திருவள்ளுவருக்கு காவி ஆடை போர்த்தியது மன்னிக்க முடியாது. மகா அயோக்கியத்தனம். அவருக்கு காவி ஆடை போர்த்தியது திட்டமிட்டு நம்மை உசுப்பி பார்ப்பது போல் ஆணவத்துடன் செய்துள்ளார். இந்தச் செயல் தொடருமானால் ஆளுநர் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் மதிமுக கருப்புக் கொடி காட்டும்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விவசாயம் கடினமானது என்று தான் சொல்லியிருப்பார். விவசாயத்தின் முதன்மை தன்மையை குறைத்து மதிப்பிட முடியாது. அவர் எந்தப் பின்னணியில் சொல்லியிருப்பார் எனத் தெரியவில்லை.

முதல்வர் ஜோசப் விஜய், ஆட்சிக்கு வந்து சில நாட்கள் தான் ஆகின்றன. அதிகாரத்திற்கு, அனுபவத்திற்கு அவர் புதிது. இப்போது அவர் நிர்வாகத்திற்குள் சென்ற பின்னர் தான் அனைத்து கஜானாவும் காலியாக பணமே இல்லை எனத் தெரிகிறது. அவருக்கு 6 மாதம் காலம் அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை விமர்சிக்க வேண்டாம்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து, அந்த நேரத்தில் நிர்வாக குழு கூட்டம் கூட்டி அறிவிப்போம். அதே நேரத்தில் தற்போது திமுகவுடன் கூட்டணி தோழமை தொடர்கிறது.

தமிழகத்தில் வன்முறை என்பது அனைத்து ஆட்சிகளிலும் நடைபெற்றுள்ளது. சிறு குழந்தைகளை நாசமாக்குவது தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. பாலியல் வன்முறையில் ஈடுபட்டு கொலை செய்பவர்களுக்கு பிணை விடுதலை வழங்கக் கூடாது.

அவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கும் விதமாக குற்றவியில் சட்டத்தை திருத்தி மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி, அந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி, அதை சட்டமாக்க வேண்டும். இந்த சம்பவத்தில் போலீஸார் திறமையாக செயல்படுகிறார்கள். இந்த சமூகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் ஒழிக்கவேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

பிரதமர் மோடி பல ஆண்டுகளாக யாரையும் சந்திப்பது இல்லை. அவரைப் போல் நகைச்சுவை செய்வதில் எந்த அரசியல்வாதிகளாலும் முடியாது. முதல்வர் ஜோசப் விஜய், செய்தியாளர்களை சந்திக்க வேண்டும், தவிர்க்க கூடாது என்பது தான் என் வேண்டுகோள் என்றார் அவர்.

SCROLL FOR NEXT