திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளது. கட்சியின் பதிவை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தனி சின்னத்தில் பிரபலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிட வேண்டும் எனவும் பெரும்பாலான மதிமுகவினர் வலியுறுத்தினர். ஆனால் இறுதி முடிவை வைகோ தான் எடுப்பார் என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் செய்தியாளர்கள் சட்டப்பேரவையில் வைகோவின் குரல் ஒலிக்க வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினர் அதற்கு வைகோ, ‘ஒலிக்காது’ என ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘ இந்த தேர்தல் குறித்து ஏற்கெனவே திட்டவட்டமாக கூறியுள்ளேன், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெரும். திமுக தனிப்பெரும்பான்மை பெறும். கூட்டணி கட்சிகளும் வெற்றி பெறும், திமுக தனித்து ஆட்சி அமைக்க கூடிய பெரும்பான்மையை பெறும். இதுவே தமிழக மக்களின் தீர்ப்பாக இருக்கும்’’ என்றார்.