நாராயணசாமி ஆதரவாளர்கள் இரண்டாம் நாளாக போராட்டம்
புதுச்சேரி: “என்னால் காங்கிரஸ் - திமுக கூட்டணி உடைய விருப்பமில்லை. கூட்டணியை காப்பாற்ற வேண்டும். எனக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கியம்” என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு நெல்லித்தோப்பு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகுதியில் நாராயணசாமி போட்டியிட அங்கீகார படிவத்தை வழங்க மாநில தலைவர் வைத்திலிங்கம் மறுத்துவிட்டார். வைத்திலிங்கம் வீட்டை நாராயணசாமி ஆதரவாளர்கள் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், நாராயணசாமி ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று ஒன்று கூடினர். அங்கு மாநில தலைவர் வைத்திலிங்கத்தை கண்டித்து ஆக்ரோஷமாக பேசினர். காங்கிரஸ் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
மாநிலத் தலைவர் பதவியிலிருந்து வைத்திலிங்கத்தை நீக்க வேண்டும், எம்பியாக உள்ள அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அவர்கள் ஊர்வலமாக நாராயணசாமி வீட்டுக்கு சென்று அவரிடம் பேசினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியது: “கூட்டணியில் நெல்லித்தோப்பு தொகுதியை கேட்டனர். அதையடுத்து என் மனுவை ஏற்கவேண்டாம் கட்சித் தலைமையிடம் சொல்லிவிட்டேன்.
என்னால் காங்கிரஸ் - திமுக கூட்டணி உடைய விருப்பமில்லை. கூட்டணியை காப்பாற்ற வேண்டும். கூட்டணி இருந்தால் பலம். எனக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கியம். தனிப்பட்டவர்கள் முக்கியமல்ல.
தேர்தல் நேரத்தில் குழப்பம் உருவாகக் கூடாது. காங்கிரஸும் கூட்டணியும் வெற்றி பெற கட்சி பணியாற்ற சொன்னேன்" என்றார்.
மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் உங்களை பழிவாங்கி விட்டார் என்று பேச்சு எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு “நீங்கள் குறிப்பிடுவது தவறான தகவல்” என்றார்.