பருவமழை
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரம், பொது இடங்களில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இதேபோல் பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. பருவமழையின் போது பலத்த காற்று வீசும் நிலையில், முறையாகப் பொருத்தப்படாத பெரிய அளவிலான விளம்பரப் பலகைகள் சாய்ந்து விழுவதற்கான வாய்ப்புள்ளது.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாநகராட்சி பகுதிகளில் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு உரிய அனுமதி பெறுவது கட்டாயம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை அகற்றுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநகராட்சி விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும், அச்சுறுத்தலாக இருக்கும் விளம்பரப் பலகைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அகற்றப்படும் என்றும், இதுதொடர்பாக பொதுமக்கள் மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.