சென்னை: “உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம்” என பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம். சட்டத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தருணங்களிலும் நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.
அதேபோல், தமிழ்நாட்டுப் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்பவர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி இதேபோன்ற கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் முதல்வர் விஜய்யின் இந்த நடவடிக்கையை வரவேற்கலாம்.” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, வானதி சீனிவாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மேகேதாட்டு - காவிரி பிரச்சினைக்காக தஞ்சையில் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தப்படும்படியான தரங்கெட்ட வார்த்தைகளை பேசியதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இது போன்று பேசும் திமுகவினரின் நாகரீகமற்ற, பொறுப்பற்ற அரசியலுக்குத்தான் மக்கள் ஆட்சியிலிருந்து அகற்றினார்கள். அப்படியும் திமுக திருந்தவில்லை. 75 ஆண்டுகால அரசியல் இயக்கம் இப்படித்தான் தனது கட்சி மேடைப் பேச்சாளர்களை உருவாக்கி வருகிறதா?.
எதிர்க்கட்சி என்பது தமிழக நலனுக்காகவும், ஆட்சிக்கான நல்ல ஆலோசனைகளையும் வழங்கி ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டுமே தவிர அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி அரசியல் செய்யும் இவர்கள் என்று திருந்தப் போகிறார்களோ?.
திமுகவினரின் இந்த அநாகரிகப் போக்கை ஒட்டுமொத்த தமிழகமும், குறிப்பாக பெண்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த கேவலமான பேச்சைத் திரும்பப் பெற்று, உடனடியாக உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.