கோவை: இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான புவியரசு இன்று கோவையில் காலமானார். அவருக்கு வயது 96.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பிரஸ் காலனியைச் சேர்ந்த கவிஞர் புவியரசு, முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
திருப்பூர் மாவட்ட உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன் புதூர் கிராமத்தில் 1931-ம் ஆண்டு பிறந்த புவியரசுவின் இயற்பெயர் சு.ஜெகநாதன். இவர் இடைநிலை பட்டத்தைக் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியிலும், தமிழ்த் துறை பட்டத்தைப் பேரூர் தமிழ்க் கல்லூரியிலும் பெற்றார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்த இவரது படைப்புகள் 1952-ல் இருந்து வெளிவர ஆரம்பித்தன. அரசியலில் ஈடுபாடு கொண்ட இவர் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்குவதற்கு நடந்த போராட்டங்களிலும், எல்லைப் போராட்டங்களிலும் ஈடுபட்டு சிறை சென்றவர்.
வானம்பாடி இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முதன்மையானவர் இவர். 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் ஷேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, பியோதர் தஸ்தயேவ்ஸ்கி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
தமிழின் சிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்பட்ட இவரது சில நூல்கள் ஆங்கிலம், ரஷ்ய, ஹங்கேரி, சிங்களம், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நவீன நாடகங்களின் முன்னோடியாக உள்ள இவர், பல்வேறு திரைப்படங்களிலும் பங்களித்துள்ளார். மேலும், சிறந்த சொற்பொழிவாளராகவும் இவர் புகழ்பெற்றவர்.
வங்க கவிஞர் நஜ்ருல் இஸ்லாமின் “தி ரெவலூஷனரி”-ன் மொழிபெயர்ப்பான ’புரட்சிக்காரன்’ என்ற மொழிபெயர்ப்புக்காக 2007-ம் ஆண்டு இவர் சாகித்ய அகாடமி விருது பெற்றார். இவரது கவிதைத் தொகுப்பான ‘கையொப்பம்’ 2009-ல் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. இவர் எழுதிய ‘முக்கூடல்’ எனும் நூல் தமிழக அரசின் சிறந்த புதுக்கவிதை நூல் என 2004-ல் பரிசு பெற்றது.