செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் மேடவாக்கம் பகுதிகளில் நடைபெற்ற 2 சாலை விபத்துகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த இரண்டு விபத்துகளில் ஆம்னி பேருந்தின் துணை ஓட்டுநர், பால் விநியோக பணியில் ஈடுபட்டிருந்த 15 வயது சிறுவன் உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு புறவழிச்சாலையில் பழவேலி அருகே, கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து, முன்னால் சென்ற சென்ற டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது பின்புறம் பலமாக மோதியதில் டிப்பர் லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்து.
பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் துணை ஓட்டுநர் (கிளீனர்) அருண் பாலாஜி (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த கமல்ராஜ் (35), சங்கர் (40), ராஜேஸ்வரி (52) ஆகியோர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிரேன் மூலம் விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
இதேபோல், தாம்பரம் அருகே மேடவாக்கம் பிரதான சாலையில் வடக்குபட்டு சாலை அருகே நேற்று அதிகாலை இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியதில், பால் பாக்கெட் விநியோகம் செய்து வந்த பென்னியல் (15) பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சுஜின் (22), அவருடன் பயணம் செய்த யஷ்வந்த் (16) ஆகியோர் படுகாயமடைந்து தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு விபத்துகள் தொடர்பாகவும் செங்கல்பட்டு போலீஸார், பள்ளிக்கரணை போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.