புதுச்சேரி: புதுச்சேரியில் விஜய் பிரச்சார இடங்களில் 19 இடங்களுக்கு அனுமதி மறுத்து 4 இடங்களுக்கு அனுமதிப்பதால் வீடியோ மூலம் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தவெக தரப்பு குறிப்பிடுகின்றனர்.
புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் தவெக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர் நடிகர் விஜய் வரும் ஏப்.5-ம் தேதி புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
மாநிலத்தின் எல்லைப் பகுதியான காலாப்பட்டில் தொடங்கி கடலூர் அருகேயுள்ள முள்ளோடை வரை 23 இடங்களில் விஜய் காலை 9.30 முதல் இரவு 9.30 வரை வேனில் பிரச்சாரம் செய்ய புதுச்சேரி தவெக சார்பில் போலீஸாரிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால், 4 நாட்கள் கடந்த பிறகும் இதுவரை அனுமதி தரப்படவில்லை.
இதற்கிடையில் சென்னை கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்தபோது கட்டுக்கடங்காத கூட்டத்தில் பாதியில் பிரச்சாரத்தை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விஜய் மீது போலீஸார் வழக்கு பதிவாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் நாள் முழுவதும் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை உயர் வட்டாரங்களில் விசாரித்தபோது, “நடிகர் விஜய் பிரசாரத்துக்கு கேட்கப்பட்ட 23 இடங்களில் 19 இடங்களுக்கு அனுமதி இல்லை. 4 இடங்களில் பிரச்சாரம் செய்யலாம். அதிகப்பட்சமாக குறைந்த நேரத்தில் அதாவது இரண்டு மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அண்டை மாநில சுற்றுப்புற பகுதிகளில் இருந்து விஜய் பிரச்சாரத்துக்கு தவெக கட்சியினர் யாரும் வர அனுமதிக்க முடியாது. அப்படி யார் வந்தாலும் எல்லையில் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றனர். அதேபோல், ரோடு ஷோவுக்கு அனுமதியில்லை, பொதுக்கூட்டம் மட்டுமே நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பிரச்சார பயணத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பிரச்சினை ஏற்படுவதால் தவெக தலைவர் விடியோக்கள் மூலம் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தரப்பில் இதுபற்றி விசாரித்தால் விரைவில் தெரிவிக்கிறோம் என்கின்றனர்.