அருண்ராஜ்

 
தமிழகம்

“லஞ்சத்தை இயல்பாக்கிய திமுக” - ரூ.1020 கோடி ‘கட்சி நிதி’ விவகாரத்தில் தவெக விமர்சனம்!

தமிழினி

சென்னை: 1020 கோடி ரூபாய் அமைச்சர் நேருவின் உறவினர்கள் மூலம் ‘கட்சி நிதி’ (PARTY FUND) என்கிற வகையில் லஞ்சமாக பெறப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை 252 பக்க ஆவணத்தை முழுமையான வலிமையான ஆதாரங்களுடன் அனுப்பி இருக்கிறது என தவெக கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “36 நாட்கள் இடைவெளியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஊழல் மணி மகுடத்தில் இன்னொரு மயிலிறகை செருகி இருக்கிறது அமலாக்கத் துறை. நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்ற பணி நியமனங்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது என ஆதாரங்களை அனுப்பி அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடந்த அக்டோபர் 27-ல் கடிதம் எழுதியது.

அதன் மீது இன்னமும் அமர்ந்து கொண்டிருக்கிறார் பொறுப்பு டிஜிபி. இப்போது டிசம்பர் 3-ஆம் தேதி அமலாக்கத் துறை மீண்டும் ஒரு கடிதத்தை தமிழ்நாடு தலைமைச் செயலாளர், டிஜிபி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பி இருக்கிறது.

இந்தக் கடிதத்தில், நகராட்சி நிர்வாக துறைக்கு உட்பட்ட பொது கழிப்பறைகள், துப்புரவுத் தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்தல், நபார்டு திட்டங்கள், துப்புரவு பணியாளர் குடியிருப்புகள், கிராம சாலைகள், நீர் / ஏரி வேலைகள் போன்ற ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக ED குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வகையில் மட்டும், சுமார் 1020 கோடி ரூபாய் அமைச்சர் நேருவின் உறவினர்கள் மூலம் "PARTY FUND" என்கிற வகையில் லஞ்சமாக பெறப்பட்டிருப்பதாக 252 பக்க ஆவணத்தை முழுமையான வலிமையான ஆதாரங்களுடன் அனுப்பி இருக்கிறது அமலாக்கத்துறை.

நகராட்சி நிர்வாக துறை மட்டுமல்ல, முதல்வர் தலைமையிலான அரசின் ஒவ்வொரு துறையின் ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் இதுதான் நடக்கிறது.

வளர்ச்சி, வளர்ச்சி என வறட்டு வசனம் பேசி வரும் முதல்வர் ஸ்டாலின் அரசு செய்த சாதனை ஒன்றே ஒன்றுதான். அது, ஊழலை normalising அதாவது இயல்பாக்கியதுதான். ஊழலில் ஊறித் திளைக்கும் இந்த ஆட்சியை அகற்றி, தூய்மையான நிர்வாகத்தை தருவதற்கு தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை வெளிச்சமாக இருப்பது தமிழக வெற்றிக் கழகமும் நமது தலைவரும் தான்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டுக்கு, புதிய வெளிச்சம் கிடைப்பது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT