தமிழகம்

தவெகவா, திமுகவா? - விசிக தலைவர் திருமாவளவன் தடுமாற்றமும், 3 காரணங்களும்

வீரமணி சுந்தரசோழன்

தேர்தலுக்குப் பின்னர் தவெகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ், ஐயுஎம்எல், மதிமுக கட்சிகள், அந்தக் கூட்டணியில் ஐக்கியமாகி அங்கமாகி விட்டனர். இடதுசாரிகளும் தவெகவோடு இணைந்து பயணிக்கும் முடிவுக்கு வந்துவிட்டனர். ஆனால், தவெக அமைச்சரவையில் பங்கேற்ற போதும், திமுகவுடனான உறவை முற்றிலும் துண்டிக்க முடியாமல் தவித்து வருகிறது விசிக.

சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவுக்கு முதல் ஆளாக காங்கிரஸ் ஆதரவளித்தது. அடுத்து இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், கட்சிக்குள் நடந்த பல சலசலப்புகளுக்கு பின்னர் விசிகவும், தவெக அரசுக்கு ஆதரவளித்தது.

தவெகவுக்கு ஆதரவளிக்க விசிகவில் இழுபறி நிலவியதால், இரண்டு எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு திருமாவளவன் துணை முதல்வர் பதவி கேட்கிறார் என சில தரப்பு விமர்சனங்களை எழுப்ப தொடங்கியது. இதனை திட்டவட்டமாக மறுத்த திருமாவளவன், இடதுசாரிகளின் வழியில் ஆட்சிக்கு வெளியில் இருந்தே ஆதரவு எனத் தெரிவித்தார்.

ஆனாலும், அமைச்சரவையில் பங்கேற்குமாறு தவெக தரப்பு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தபடியே இருந்தது. விசிக தொண்டர்களும் ஆட்சியில் பங்கெடுக்க வேண்டுமென தலைமையை நெருக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக அமைச்சரவையில் பங்கெடுக்கும் முடிவையும் அறிவித்தார் திருமாவளவன். ஆட்சியில் பங்கெடுத்தாலும் கூட இப்போது வரை கூட்டணி குறித்த விஷயத்தில் தெளிவில்லாத வகையில்தான் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது “சீமானும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள்” என விமர்சித்திருந்தார் திருமாவளவன். அதனை தவெகவினரே மறந்துவிட்டாலும், இப்போது வரை மேடை தோறும் அந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் நினைவூட்டி, அதற்கு விளக்கமளித்து வருகிறார் திருமாவளவன்.

அதுபோல, “அமைச்சரவையில் பங்கேற்றதாலேயே தவெக கூட்டணியில் இணைந்துவிட்டதாக சொல்ல முடியாது. தற்போது வரை தவெக கூட்டணியில் விசிக இணைய அதிகாரப்பூர்​வ​மாக எந்த நிகழ்​வும் நடை​பெற​வில்​லை, தவெக கூட்​டணி தொடர்​பாக முதல்​வர் விஜய் தலைமையில் நடை​பெற்​ற கூட்​டத்​தில், கூட்​டணி குறித்து இறுதி முடிவு எடுக்​க​வில்​லை.

எனவே, தவெக தலை​மை​யில் ஒரு கூட்​டணி அமையவில்லை என்​பது​தான் இன்​றைய நிலை. நாங்கள் எடுக்​கின்ற முடிவு​கள் ஒவ்​வொன்​றை​யும் கூட்​டணி தலைமை​யான மு.க.ஸ்​டா​லினிடம் பகிர்ந்​து​ கொண்டோம். அந்த உறவு இன்​னும் தொடர்​கிறது” என்று தெரிவித்தது சலசலப்பை உருவாக்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, “காட்டுமன்னார் கோயிலில் நான் ஏன் போட்டியிடவில்லை என என்னிடம் விளக்கம் கேட்கும் யாரும், இதுகுறித்து திமுகவிடம் ஏன் கேட்பதில்லை” என்று பேசி திமுகவை மறைமுகமாக சாடியிருந்தார் திருமாவளவன். ஆனால், அதன்பின்னர் தனது டோனை மாற்றி இப்போது திமுகவையும் விட்டுக்கொடுக்காமல் பேசுவது அனைத்து தரப்பையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தவெக ஆட்சியை கவிழ விடமாட்டோம், 5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும் என்றெல்லாம் ஒருபுறம் திருமாவளவன் சொல்லி வந்தாலும், மறுபுறம் ‘கூட்டணி விஷயத்தில் குழப்பமான கருத்துகளை’ திருமாவளவன் சொல்லி வருவது தவெக தரப்புக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே திருமாவளவன் வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடக் கூடாது என தோழமைச் சுட்டினார் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர். வைகோவோ ஒருபடி மேலே சென்று, “இதுபோன்ற கருத்துக்காக திருமாவுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்” என்று வெளிப்படையாகவே கிண்டல் அடித்தார்.

3 முக்கிய காரணங்கள்:

திருமாவளவனின் தடுமாற்றத்துக்கு 3 முக்கிய காரணங்களை சொல்கின்றனர். ஒன்று, விசிகவின் தொண்டர்கள் தவெக கூட்டணியை விரும்பினாலும், பல முன்னணி நிர்வாகிகள் திமுக கூட்டணியையே விரும்புவதாக சொல்லப்படுகிறது. அதற்கு ஒரு உதாரணமாகவே பனையூர் பாபுவை திமுக தன் பக்கம் இழுத்துக் காட்டியது. ‘ஷாநவாஸ் உள்பட சில முன்னணி நிர்வாகிகளை இழுத்து விசிகவை உடைக்க திமுக திட்டம் தீட்டுகிறது’ என வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. அதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவே, திமுகவை கடுமையாக எதிர்க்க முடியாமல் தவிக்கும் திருமாவளவன், கூட்டணி விஷயத்தில் முடிவெடுக்க முடியாமலும் குழம்புவதாக சொல்லப்படுகிறது.

இரண்டாவது, ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக என எந்தக் கட்சியும் விஜய்யை பெரிதாக விமர்சிக்கவில்லை. ஆனால், அப்போது விஜய்யை வெளிப்படையாக பல இடங்களில் விமர்சித்தவர் திருமாவளவன். அப்படியெல்லாம் விமர்சித்துவிட்டு, திடீரென இப்போது பல்டியடிப்பது விமர்சனங்களை சந்திக்கும் என்றும் அஞ்சுகிறார்.

மூன்றாவதாக, பாமகவும் தவெகவோடு நெருக்கம் காட்டி வருகிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்றார் முதல்வர் விஜய். ஆனால், பதவியேற்ற பின்னர் அன்புமணியில் இல்லத்துக்கே சென்று சந்தித்து அளாவளாவினார். அன்புமணியும் தவெக பற்றி நல்லவிதமாகவே பேசி வருகிறார். அன்புமணியின் சமூக நீதி சர்வே கோரிக்கையை ஆளுநர் உரையில் உடனே இடம்பெற செய்து பாமகவிடம் நல்ல பெயர் வாங்கினார் விஜய். மேலும், பல்வேறு கோரிக்கைகளுக்காக அவ்வப்போது முதல்வர், அமைச்சர்களை சந்திக்கும் அன்புமணிக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுவதும் கவனம் பெற்றுள்ளது.

ஒருவேளை தவெக அரசு மீது விமர்சனக் கணைகளை விசிக வேகப்படுத்தினால், பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவரும் திட்டமும் விஜய்யிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அன்புமணியும் இதற்கு ஆயத்தமாகவே இருக்கிறார்.

தேர்தல் முடிவுகளில் தமிழகம் முழுவதும் தவெக அலை வீசினாலும், பாமகவின் கோட்டையான வடமாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் விசில் சத்தம் வேகமெடுக்கவில்லை. எனவே, அடுத்தடுத்த தேர்தல்களில் வெல்ல பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது நல்லது என்றும் ஆலோசகர்கள் தரப்பு விஜய்யிடம் சொல்லியுள்ளது.

அப்படி ஒருவேளை பாமக, தவெக பக்கம் வந்தால், மீண்டும் திமுக பக்கம் செல்லும் சூழல் உருவாகும். எனவே இப்போதிலிருந்தே கவனமாக செயல்படுவோம் என்ற கோணத்தில்தான் திருமாவளவன் இப்படி காய் நகர்த்தி வருகிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்லுகின்றனர்.

தோழமைக் கட்சிகளுடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தியுள்ள முதல்வர் விஜய், விரைவில் கூட்டணிக்கு பெயர் வைத்து முழு வடிவம் கொடுப்பார் என சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் முன்னுக்குப் பின் முரணாக திருமாவளவன் பேசி வருவது, தவெகவுக்கு மட்டுமல்ல, விசிகவுக்கே ‘புரியாத புதிர்’ ஆக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT