தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் | கோப்புப் படம்

 
தமிழகம்

“விஜய் சேதுபதி பேசுவதால் அரசியல் மாறிவிடாது” - தவெக எம்எல்ஏ கனிமொழி

செய்திப்பிரிவு

கோவை: கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் செரயம்பாளையம் நீலாம்பூர் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தவெக எம்.எல்.ஏ.கனிமொழி சந்தோஷ் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “செரயம்பாளையம் பகுதியில் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களின் எண்ணிக்கையை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கான முக்கியத்துவத்தை வழங்குவோம். அப்பகுதியில் மேல்நிலைப்பள்ளி கொண்டு வருவதற்கான முயற்சிகளை நிச்சயமாக மேற்கொள்வோம்.

ஜனநாயக நாட்டில் அரசியல் விமர்சனம் செய்வதற்கான கருத்துரிமை அனைவருக்கும் இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு கட்சியின் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால், அக்கட்சியின் பெயரை குறிப்பிட்டு பேசலாம். முதல்வர் விஜயின் பெயரை குறிப்பிட்டு பேசட்டும். அதற்கு மக்கள் தங்களுடைய பதிலைச் சொல்வார்கள்.

ஒரு நிகழ்ச்சியில் பொதுவாக பேசப்படும் கருத்துகளை அரசியல் ரீதியாக மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அரசியல் விமர்சனம் என்றால் அது வெளிப்படையாக இருக்க வேண்டும். விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

இந்த அரசின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து. அவற்றுக்கு தீர்வு காண்பதே எங்களுடைய முக்கிய நோக்கம். அரசியலில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் இறுதியில் மக்கள் எதை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT