விழுப்புரம்: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா. இவர், சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி காரில் நேற்று வந்தார். அதே திசையில் செங்கல்பட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் சசிக்குமார் என்பவரும் வந்துள்ளார்.
இவர், பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார். ஏற்கெனவே பாஜகவில் இருந்ததால் ஹெச்.ராஜாவுக்கு சசிக்குமார் அறிமுகமானவர். இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் இருவரது கார்களும் ஒன்றாக வந்தபோது, கார்களை நிறுத்தி இருவரும் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.
அப்போது, பாஜகவில் இருந்தபோது மத்திய அரசின் வழக்கறிஞர் பதவியை பெற்றுக் கொண்டு தவெகவில் இணைந்துவிட்டது குறித்து ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த வழக்கறிஞர் சசிக்குமார், மத்திய அரசின் வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூற, “ராஜினாமா செய்துவிட்ட பிறகு ‘ஜி’ என்ற அரசு முத்திரையை ஏன் காரில் பயன்படுத்தி இருக்கிறீர்கள்? மேலும் ‘ஜி’ என்ற வாசகத்துடன் காரில் தவெக கொடியை ஏன் பறக்க விட்டுள்ளீர்கள்?” என ஹெச்.ராஜா கேட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், ஆத்தூர் சுங்கச்சாவடி பகுதியில் இருந்து ஹெச்.ராஜா புறப்பட்டு வந்துள்ளார். அவரது காரை, தவெக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் சசிக்குமாரின் கார் விரட்டி இருக்கிறது.
சுமார் 12 கி.மீ. தொலைவுக்கு விரட்டி வந்து, ஒலக்கூர் அடுத்த மேல்பேட்டையில் வழிமறித்துள்ளனர். மேலும் கார் முன்பு உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸார் சமாதானம்
அப்போது ஹெச்.ராஜாவுடன் வழக்கறிஞர் சசிக்குமார் தரப்பினர் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். இதையறிந்த உள்ளூர் தவெகவினரும் இணைந்து, தங்கள் கட்சி தலைவருக்கு எதிராக பேசிய கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. ஒலக்கூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.