தமிழகம்

கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகம் முன் தேசியக் கொடி ஏற்ற மறந்த தவெகவினர்

சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: சுதந்திர தினத்தையொட்டி கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகம் முன் தேசிய கொடி ஏற்ற தவெகவினர் மறந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் சட்டப்பேரவை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வினோத், வேளாண்மைத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், எம்எல்ஏ அலுவலகம் முன் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவின் போது, தேசியக் கொடி ஏற்றி, குழந்தைகள் உள்ளிட்டோருக்கு இனிப்பு வழங்குவது வழக்கம்.

நிகழாண்டு சுதந்திர தினமான இன்று கும்பகோணம் எம்எல்ஏ அலுவலத்தில் தேசிய கொடியேற்றாததால் அலுவலக வளாகம் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் தவெகவினர் உள்பட அனைத்து கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, கட்சி நிர்வாகிகளிடம் கேட்ட போது, முதல்வர் விஜய், முதன்முதலாக தேசிய கொடியேற்றுவதால், அமைச்சர் வினோத்தை, சென்னைக்கு வர உத்தரவிட்டுள்ளனர். அதனால் அவர் சென்னை சென்று விட்டார் எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலை தேசிய கொடி ஏற்றி கொண்டாடிய நிலையில், அரசு அலுவலகமான கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றத் தவறியது மிகுந்த வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT