சென்னை: “மக்கள் தீர்ப்பை நீர்த்துபோக செய்யும் அளவுக்கு இந்த இரண்டு கட்சிகளும் திட்டமிட்டிருக்கிறார்கள். சிலர் இதை தடுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் முயற்சி செய்தது உண்மைதான்” என திமுக + அதிமுக வியூகம் குறித்த கேள்விக்கு, தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பதிலளித்துள்ளார்.
தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் நிலவுவதால் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை நாடி வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொய்தீனிடம் தவெக நிர்வாகி அருண்ராஜ் ஆதரவு கோரினார்.
பின்னர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதைதான் ஆளுநர் செயல்படுத்த வேண்டும். சட்டமன்றத்தில் தான் மெஜாரிட்டியை நிருபிக்க வேண்டும். பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. பல கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளோம்; நல்லது நடக்கும் என நம்புகிறோம்.
சட்டப்பூர்வமான ஒரு விஷயத்தை தள்ளிப்போடலாமே தவிர, தடுத்து நிறுத்த முடியாது. உரிய நேரத்தில் நாங்கள் பதிலளிப்போம். நீதி வெல்லும். தேர்தலுக்கு முன்பிருந்தே தவெக தலைவர் விஜய்க்கு பல்வேறு இடையூறுகள் செய்யப்பட்டன” என்று அவர் கூறினார்.
பின்னர் திமுக - அதிமுக கூட்டணி அமைத்து தவெகவை ஆட்சி அமைக்க விடமாட்டார்கள் என்ற பேச்சு எழுகிறதே என்ற கேள்விக்கு, “தமிழக மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஓபிஎஸ்ஸை ஏன் அதிமுகவில் இருந்து வெளியே அனுப்பினார்கள்? திமுகவுடன் உறவு வைத்துள்ளார் என்பதற்காகத்தானே. இவர் (இபிஎஸ்) ஏன் இப்படி செய்கிறார் என ஊருக்கே தெரியும்.
தமிழக மக்கள் இதை கவனிக்க வேண்டும், சிந்திக்க வேண்டும். இவர்களுக்கா ஓட்டு போட்டோம் என மக்கள் சிந்திக்க வேண்டும். மக்கள் தீர்ப்பை நீர்த்துப்போக செய்யும் அளவுக்கு இந்த இரண்டு கட்சிகளும் திட்டமிட்டிருக்கிறார்கள். சிலர் இதை தடுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் முயற்சி செய்தது உண்மைதான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.