கோவை: கோவையின் 10 தொகுதிகளில் இன்று (மே 4) மதியம் நிலவரப்படி, தவெக 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.கோவையில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதிமுகவின் கோட்டை எனப்படும் கோவையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பெரும்பாலான தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தனர்.
இன்று மதியம் 1 மணி நிலவரப்படி கோவையில் சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம், சூலூர், கோவை வடக்கு ஆகிய தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முதல் சுற்றில் இருந்தே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர். மாநகர் மற்றும் புறநகரப் பகுதிகளை உள்ளடக்கிய கிணத்துக்கடவு தொகுதியில் முதல் சுற்றில் இருந்தே தவெக வேட்பாளர் விக்னேஷ் முன்னிலையில் இருந்து வருகிறார்.
முதல் சுற்றில் 3,385, 2-வது சுற்றில் 7,361, 3-வது சுற்றில் 11,606, 4-வது சுற்றில் 15,754 என தொடர்ந்து முன்னிலை பெற்று 19-வது சுற்றின் முடிவில், 71,704 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்து திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயன் 61,553 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.
அதேபோல், கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி சந்தோஷ் முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில் பின்னடைவில் இருந்தார். 3-வது சுற்றில் இருந்து அவர் முன்னிலை பெறத் தொடங்கினார்.
இன்று மதியம் 12-வது சுற்றின் முடிவில் தவெக வேட்பாளர் கனிமொழி சந்தோஷ் 59505 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏவுமான பி.ஆர்.ஜி.அருண்குமார் 44,381 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சூரியபிரகாஷ் 38463 வாக்குகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.
சிங்காநல்லூர் தொகுதியில் 10-வது சுற்றின் முடிவில், தவெக வேட்பாளர் ஸ்ரீகிரி பிரசாத் 33,268 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் 23,116 வாக்குகளும், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி 22,028 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
சூலூர் தொகுதியில் 10-வது சுற்றின் முடிவில் தவெக வேட்பாளர் சுகுமார் 34,552 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி 30012 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.