கோவை: தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கோவை வந்தார். மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
“தவெக அரசில் சில அமைச்சர்கள்தான் பதிலளிக்கிறார்கள். அந்தந்த இலாகா அமைச்சர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். பெரும்பாலான அமைச்சர்கள் அவருடைய இலாகா சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை. சட்டப்பேரவைத் தலைவர் தற்போது 10 மணி நேரம் சட்டப்பேரவையை நடத்துகிறார். பத்து மணி நேரம் நடத்துவது என்பது சரியில்லாதது.
நாளை மறுநாள் காவல்துறை மானிய கோரிக்கை உள்ளது. அப்போது சட்டம் - ஒழுங்கு குறித்து பேசுவோம். அரசாங்கத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம். அதற்கு அரசாங்கம் என்ன பதில் சொல்கிறது என்பதை பார்ப்போம்.
தவெக ஆட்சி பொறுப்பேற்ற இந்த 110 நாட்களில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் நடமாட்டம், பாலியல் குற்றங்கள் எல்லாம் அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதற்கெல்லாம் நடவடிக்கை வரும் என்று சொன்னார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நிர்வாக சீர்கேட்டின் காரணமாக இக்குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது. அப்படி நிலைத்தால் ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்குவார்கள். எப்போது பார்த்தாலும் ‘ஊழல்… ஊழல்’ என்று சொல்கிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஊழல் அதிகரித்துள்ளது. அப்படியிருக்கையில் இந்த ஆட்சியை தூய்மையான ஆட்சி என்று எப்படி சொல்ல முடியும்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, ‘மேட்டூர் அணையை முன்னாள் முதல்வர்கள் எளிமையாக திறந்து வைத்தனர். ஆனால், தற்போது மேட்டூர் அணையை திறக்க பிரத்யேக விமானம் பிடித்து முதல்வர் வருகிறார்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பழனிசாமி கூறும்போது, ‘‘இவர் காஸ்ட்லி முதல்வர். ஆனால், நாங்கள் விவசாயி. என் நிலைமை வேறு அவரது நிலைமை வேறு. அடுத்த பிரதமர் விஜய் என்ற பரப்புரை குறித்து கேட்கிறீர்கள். அமெரிக்க ஜனாதிபதியாக கூட அவர் ஆகலாம். தமிழகத்தில் ரீல்ஸ் ரீல் விட்டு ஏதாவது செய்யலாம். வட மாநிலங்களில் அது நடக்காது. என்டிஏ கூட்டணியில் அதிமுக இன்னும் தொடர்கிறது.
தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் நிலைக்காது என்பது அவர்களது போக்கை வைத்து தெரிந்து விடுகிறது. ஆட்சி பொறுப்பு ஏற்று 110 நாட்கள் தான் ஆகிறது. செவிலியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், பகுதி நேர ஆசிரியர்கள் என பல தரப்பட்ட மக்களும் போராடக்கூடிய நிலை வந்துவிட்டது. விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார்.