டிடிவி.தினகரன் | கோப்புப் படம்
ராமநாதபுரம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதுடன், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அமமுக பிரமுகரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 2 வாரங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச்செயல், ரவுடியிசம் அதிகரித்து வருகிறது. மாற்றம் வேண்டும் என மக்கள் தவறான முடிவெடுத்து விட்டனர் என்பதை இன்னும் 6 மாதங்களில் மக்கள் உணர்ந்து கொள்வர்.
ஆசை வார்த்தை கூறி... அதிமுக எம்எல்ஏ.க்களுக்கு தவெக குதிரை பேரம் நடத்தி அமைச்சர் பதவி வழங்குவதாக ஆசைவார்த்தை கூறியதால், அதிமுகவில் இருந்து சிலர் பிரிந்து சென்று ஆதரவளித்தனர். ஆனால் தவெக பொய்யான வாக்குறுதி அளித்ததை அறிந்த பலரும் மீண்டும் பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உண்மைத்தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஓர் அணியில் இணைவார்கள். தவெகவில் இணைந்த வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட உண்மையான விசுவாசிகளும் விரைவில் அதிமுகவில் இணைவார்கள். திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்து, அமைச்சரவையில் சேர்ந்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சி வராமல் தடுப்பதற்காக ஆதரவு அ்ளித்ததாகக் கூறுவது அவர்களுக்கு சரியாக இருக்கலாம். அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அவருக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களை விஜய் நடுத்தெருவில் விட்டுள்ளார்.
குறுக்கு வழியில் திராவிட கட்சிகளை முதல்வர் விஜய் அழிக்கப் பார்க்கிறார். மின்சார பிரச்சினை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை அவர் சரியாக கையாளவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதல்வர் டெல்லியில் பிரதமரை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பிரதமருடன் நடைபெற்ற உரையாடல் குறித்து விளக்குவது வழக்கமானது. ஆனால் விஜய் இதுவரை செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.