தமிழகம்

“பதவிக்காக எதையும் செய்ய துணிந்து விட்டார் ஓபிஎஸ்” - தினகரன் தாக்கு

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “பதவிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன், முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி பேசியது, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுவதாகும். ஓபிஎஸ் பதவிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார். ஓபிஎஸ் தற்போது 3.0-வை யார் சொல்லித் தொடங்கினார் என்பது தெரியவில்லை. தர்மயுத்தத்தை தர்மர் நடத்த வேண்டும்; அதர்மவாதி நடத்தினால் அதர்மத்தில்தான் முடியும். துரியோதனன் கூட்டத்தில் சென்று சேர்கிறார்கள்.

          

சட்டப்பேரவை, மாநிலங்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில், திமுகவின் முதல் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே தொடர்பு இருப்பதாக தெரியவருகிறது. அதனால் அமைச்சர் நேருவை பாதுகாக்க நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘இபிஎஸ்-ஐயும், உங்களையும் வீழ்த்த சசிகலா கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறதே?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஜெயலலிதாவின் கட்சியை ஒன்றிணைப்பேன், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவேன் என சொல்லிக் கொண்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது திடீரென கிளம்பி டம்மி வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளனர்.

அதிமுகவை ஒன்றிணைப்போம் என கூறியவர்கள் எல்லோரும் திமுகவின் ஏஜென்ட்களாக செயல்படுவது வெட்டவெளிச்சமாகி வருகிறது. அவர்களுக்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள். எனவே யாராவது கட்சி ஆரம்பிப்பேன் என்றால் யாரும் ஏமாற வேண்டாம்” என்றார் தினகரன்.

SCROLL FOR NEXT