டிடிவி தினகரன்
சென்னை: கடந்த ஆட்சியாளர்கள் வாங்கிய கடனையும், நிர்வாக சீர்கேடுகளையுமே காரணங்களாக அடுக்கி, தனது ஆட்சியை நிறைவு செய்து விடலாம் என நினைத்தால் இந்த ஆட்சியாளர்களின் போலி தூய சக்தி வேடத்தை தாங்களாகவே கலைக்கும் முன்னர், மக்கள் கலைத்துவிடுவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சியில் நேற்று நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில், மக்களின் நலத்திட்டங்கள் குறித்தோ, கடந்த மூன்று வாரங்களாக அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தோ முதல்வர் விஜய் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் சினிமா வசனங்களும், அடுக்குமொழி பேச்சுகளும், பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளன.
அவரது அரசு நிர்வாகத்தைச் சீரமைக்க ஆறு மாத கால அவகாசம் தேவை எனக் கோரும் முதல்வர் விஜய்க்கு, கொலை-கொள்ளை, லஞ்சம் கேட்டு மிரட்டுதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம், மருத்துவமனைகளில் நிலவும் அவலங்கள் போன்ற சட்டம் - ஒழுங்கு மற்றும் மக்கள் நலன் சார்ந்த அவசர பிரச்சினைகளுக்கு அந்தக் கால அவகாசம் பொருந்தாது என்பது தெரியாதா?
தவெகவுக்காக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் கூட இன்று நியூஸ் பார்க்கும் நிலையில் உள்ளார்கள் என்று கூறும் முதல்வர் விஜய் ஒவ்வொரு நாளும் சந்தி சிரித்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் அந்த நியூஸ்களில் வருவதை பார்ப்பதில்லையோ என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுகிறது.
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், குறு மற்றும் சிறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முந்தைய அரசுகள் விட்டுச் சென்ற கடன் சுமையைக் காரணம் காட்டி அரைகுறையாகத் திட்டங்களைச் செயல்படுத்தி பொதுமக்களையும் விவசாயிகளையும் வஞ்சித்து வருகிறார்.
தேர்தலுக்கு முன்பே தமிழகத்தின் கடன் சுமை சுமார் பத்து லட்சம் கோடி ரூபாயாக இருப்பது தெரிந்திருந்தும், அதைக் கருத்தில் கொள்ளாமல் நடைமுறைக்குச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் என்ன செய்ய முடியுமோ? அதைத்தான் செய்ததாகக் கூறியுள்ள முதல்வர் விஜய், தனது சுய விளம்பரத்திற்காக மட்டுமே அறிவித்த இந்த விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பைப் பார்க்கும் போது, வரும் காலங்களில் இவர் எந்த லட்சணத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது என விவசாயிகள் வேதனையைத் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்திவரும் முதல்வர் விஜய்யின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அல்லு சில்லுகளின் ஆதரவோடு தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டு, அது போதாது என தீர்ந்த சக்திகள், மற்றும் பலரின் சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேர அரசியலைக் கையாண்டு, அவர்களில் சிலரை ராஜினாமா செய்ய வைத்ததோடு அவர்கள் அனைவரையும் சட்ட சிக்கலில் நிறுத்தியிருப்பதை என்னவென்று சொல்ல? இது தூய சக்தி அரசியலா? அல்லது குதிரை பேர அரசியலா?
ஆகவே, கடந்த ஆட்சியாளர்கள் வாங்கிய கடனையும், நிர்வாக சீர்கேடுகளையுமே காரணங்களாக அடுக்கி, தனது ஆட்சியை நிறைவு செய்து விடலாம் என நினைத்தால் இந்த ஆட்சியாளர்களின் போலி தூய சக்தி வேடத்தை தாங்களாகவே கலைக்கும் முன்னர், மக்கள் கலைத்துவிடுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.