சென்னை: அதிமுகவும், அமமுகவும் வேறு அல்ல, எப்போதும் ஒரு தொண்டனாக அதிமுகவுடன் நிற்பேன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூய சக்தி என்று கூறி வெற்றி பெற்ற தவெக, பெரும்பான்மை கிடைக்காத நிலையில் என்னென்ன குறுக்கு வழிகளை முயற்சி செய்து ஆட்சி அமைத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்றைக்கு முதல்வரும், அவரது அமைச்சர்களும் தினம் தினம் சினிமா கதைகளை போல் ரீல் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தனது எம்எல்ஏக்களை தக்கவைத்துக் கொள்ளவும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தங்களை தாக்கி பேசுவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் கார் கொடுப்பதாக கூறி, ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர்.
என்னையும், சசிகலாவையும் அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் பலரும் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்களது விருப்பம் நியாயமானதுதான்.
ஆனால், பழனிசாமி மீது குறைசொல்வதை காட்டிலும், கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை உள்ளிருந்து அவரோடு பேசி அதை சரிசெய்ய வேண்டும்.
அமமுகவும், அதிமுகவும் வேறு அல்ல. இரண்டுமே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட்சிகள்தான். நான் இப்போதும் அதிமுகவுடன்தான் நிற்கிறேன். எப்போதும் அதிமுகவுடன் ஒரு தொண்டனாக உறுதுணையாக நிற்பேன்.
மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நாங்கள் பயணிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.